அரசு உரிய நடவடிக்கை எடுக்காததே மிகப் பெரிய கலவரத்திற்கு காரணம்:அன்புமணி ராமதாஸ்

அரசு உரிய நடவடிக்கை எடுக்காததே மிகப் பெரிய கலவரத்திற்கு காரணம்:அன்புமணி ராமதாஸ்

கள்ளக்குறிச்சி 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி மரணத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காததே மிகப் பெரிய கலவரத்திற்கு காரணம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி ராமதாஸ் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கட்சிக் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சோழிங்கநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சின்னசேலம் கள்ளக்குறிச்சியில் 12-ம் வகுப்பு பள்ளி மாணவி மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில் பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்ததாக கூறினார்.

இந்த போராட்டம் கலவரமாக மாறியதற்கு காவல்துறை தான் காரணம் என்றும் ஒருதலை பட்சமாக பள்ளிக்கு சாதகமாக  செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். எனவே  இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் இல்லையென்றால்  சிபிஐ விசாரணை கோரி பாமக மிகப் பெரிய போராட்டம் நடத்தும் என்றும் அன்புமணி ராமதாஸ் எச்சரித்தார்.