ரூ.200 கோடி மோசடி; 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை!

வின்ஸ்டார் நிறுவனத்தின் 200 கோடி மோசடி வழக்கில் 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகையை கோவை நீதிமன்றத்தில் இன்று போலீசார் வழங்கியுள்ள நிலையில் மன உளைச்சலில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் வின்ஸ்டார் இந்தியா என்ற நிறுவனம் சிவகுமார் என்பவரால் 2017ம் ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதில் ரியல் எஸ்டேட், நிதி நிறுவனம் தொடங்கி குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறப்பட்டது. மேலும் வீட்டுமனை பட்டாக்களும் குறைந்த விலையில் தருவதாகவும் சிவக்குமார் கூறியுள்ளார். இதை நம்பி சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை 1500க்கும் மேற்பட்டோர் பணத்தை முதலீடு செய்துள்ளனர். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் உரியவர்களுக்கு அவர் பணம் தராததால் இது இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் 200  கோடி ரூபாய் வரை மோசடி நடந்தது தெரிய வந்தது. 

இது குறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் 2017 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்  பாதுகாப்பு  சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்கு நடைபெற்று வருகிறது. அதன்படி இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 30 பேர் மீது தலா 50 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை என மொத்தம் 15 லட்சம் பக்க குற்றப் பத்திரிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. 

கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு நேற்று வந்துள்ள நிலையில், குற்ற பத்திரிக்கையை போலிசார் நீதிமன்றத்தில் வழங்கியுள்ளனர். மேலும் 30 பேரும் கோவை நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ள நிலையில் நீதிபதி செந்தில்குமார் முன்பு விசாரணை நடைபெற்றது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த பாதிக்கப்பட்ட சேலத்தை சேர்ந்த நபர்கள் கோவை நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.

இதனையடுத்து செய்தியாளரிடம் பேசிய அவர்கள், கடந்த ஆறு வருடமாக இந்த வழக்கு தொடர்பாக போராடி வருவதாகவும், பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்துள்ளதாக தெரிவித்த அவர்கள், இதுவரை முதலீடு செய்த நபர்கள் 20 பேர் மன உளைச்சலில் இறந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் சிவக்குமார் என்பவர் ஜாமினில் வெளியில் வந்து தங்களுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையும் படிக்க: "காவிரியில் தண்ணீர் பெற்றுத்தர தி.மு.க அரசுக்கு திராணி இல்லை" - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்