ரெட் ஜெயன்ட் மூவீஸ் பெயரில் மிரட்டல்; 7 பேர் கைது!

ரெட் ஜெயன்ட் மூவீஸ் பெயரில் மிரட்டல்; 7 பேர் கைது!

கள்ளக்குறிச்சியை சேர்ந்த நபரிடம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 7 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகாவைச் சேர்ந்த பாபு (எ) டில்லிபாபு, வ/55 என்பவர் நேற்று முன்தினம் (17.08.2023) கள்ளக்குறிச்சி மாவட்டம், பெர்படா குறிச்சியைச் சேர்ந்த வெங்கடேஷ் பெருமாள் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு ஹரிஷ் மற்றும் அனிஷ் ஆகியோருக்கு தர வேண்டிய பணத்தை உடனடியாக கொடுத்துவிடு. நான் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். இல்லையேல் உன்னை என்ன செய்வேன் என தெரியாது என மிரட்டியுள்ளார். இது குறித்து வெங்கடேஷ் பெருமாள், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, டில்லிபாபு என்ற நபர் இங்கு வேலை செய்யவில்லை எனவும். தங்களது நிறுவனத்தின் பெயரை தவறுதலாக யாரோ பயன்படுத்தி மிரட்டியுள்ளதாகவும் தெரிவித்தனர். உடனே, இது குறித்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஸ்டுடியோ இயக்குநர் சரவணமுத்து என்பவர் F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது மோசடி மற்றும் மிரட்டுதல் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.

F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான ஹரிஷ் (எ) சீனிவாசன், வ/27 மற்றும் அனிஷ் (எ) ஜெகநாத் அனிஷ், வ/24 ஆகியோருக்கு கள்ளக்குறிச்சியை வெங்கடேஷ் பெருமாள் என்பவர் பல இலட்சம் பணம் தர வேண்டியுள்ளது. இதனால் எதிரிகள் ஹரிஷ் மற்றும் அனிஷ் ஆகியோர் மற்றொரு எதிரி மஞ்சுநாதன் உதவியுடன். முக்கிய எதிரி பாபு (எ) டில்லிபாபுவிடம் பணம் பெற்று தரக்கோரியதன்பேரில், பாபு (எ) டில்லிபாபு, வெங்கடேஷ் பெருமாளை செல்போனில் தொடர்பு கொண்டு தான் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், ஹரிஷ் மற்றும் அனிஷ் ஆகியோருக்கு தர வேண்டிய பணத்தை உடனே தர வேண்டும் என்று மிரட்டியதும் தெரியவந்தது.

அதன்பேரில், மேற்படி நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறி. நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, மிரட்டல் விடுத்த 7 நபர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட  7 எதிரிகளும் விசாரணைக்குப் பின்னர். நேற்று (18.08.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிக்க: "இரும்புக் கோளுக்கு" கடிதம் அனுப்பிய பாஜகவினர்!