ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 பேர் கொண்ட கும்பல் கைது...
சென்னை வியாசர்பாடியில் முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வியாசர்பாடி ஜே ஜே ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரி. இவர் அதே பகுதியில் சார்மினார் போடும் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பவானி என்கின்ற மனைவியும் இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். நேற்றிரவு 11 மணி அளவில் ஹரி தனது வீட்டின் வெளியே அமர்ந்து தனது மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தபோது மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த 8 பேர் ஹரியை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த ஹரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்ட போலீசார் 8 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். இவர்கள் அனைவரும் வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், மற்றொரு ரவுடியான பப்லு என்பவரை 2017ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முன்விரோதம் காரணமாக ஹரி கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 8 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.