எதிரிகளுக்கு பயந்து தனியாக இருந்த பெண்ணின் அறையில் புகுந்த ரவுடி...!

எதிரிகளுக்கு பயந்து தலைமறைவாக இருந்த ரவுடி ஒருவர் தனியாக இருந்த பெண்ணின் அறையில் புகுந்து அவரிடம் தவறாக நடக்க முயன்றதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ராயப்பேட்டை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி பிரபல நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இன்று காலை பணிக்கு செல்வதற்காக தனது அறையில் இருந்த போது,  உள்ளே நுழைந்த மர்ம நபர் வீட்டின் கதவை தாளிட்டு தவறாக நடக்கமுயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் கத்தி கூச்சலிட்டு, அந்தநபரை உள்ளே வைத்து பூட்டி விட்டு காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாசாலை போலீசார், அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பிடிப்பட்ட நபர் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த லிட்டில் ஜான் என்பதும், அம்பத்தூர், கீழ்பாக்கம், சோழாவரம், ஆவடி,  பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் 2 கொலை வழக்கு உட்பட 52 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

மேலும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் எதிரிகளுக்கு பயந்து தலைமறைவாக இருப்பதற்காக துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் செக்ரியூட்டி ஏஜென்சியில் சேர்ந்து, கடந்த 2 நாட்களாக இந்த அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் தங்கி காவலாளியாக பணியாற்றி வந்ததும், இந்த வீட்டில் வடமாநில பெண் ஒருவர் தனியாக இருப்பதை கண்டதும் சபலத்தில் தவறு செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

போலீசார் அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த அண்ணா சாலை போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க : காவிரி கர்நாடகாவின் சொத்து அல்ல...அனைத்து மாநிலங்களுக்கும் காவிரி சொந்தம் - டி.கே.எஸ்.இளங்கோவன்