மகள் வாங்கிய கடனுக்காக தாயை கடத்தி கொலை செய்து புதைத்த தந்தை - மகன்.. மேலும் ஒரு குற்றவாளி கைது!!
சங்கராபுரம் அருகே மகள் வாங்கிய கடனுக்காக தாய் கடத்தி கொலை செய்த வழக்கில் மேலும் ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி. இவர் அதே ஊரை சேர்ந்த அரிசி மொத்த வியாபாரியான தனலட்சுமி என்பவரிடம் அரிசி வாங்கி தரகேட்டு ரூ.15 லட்சம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
பணத்தை பெற்றுக் கொண்ட தனலட்சுமி அரிசி வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் காலம் கடத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வீராசாமி மற்றும் அவருடைய மகன் விக்னேஷ் ஆகியோர் தனலட்சுமியின் தாய் ஆண்டாளை அழைத்துச் சென்று கொலை செய்து புதூர் சுடுகாட்டில் புதைத்து விட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிவு , கடந்த சில நாட்களுக்கு முன்பு வீராசாமி, விக்னேஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஆண்டாளை சுடுகாட்டில் புதைக்க உடந்தையாக இருந்த திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த அல்லப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த சீனு என்பவரை வடபொன்பரப்பி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன் பிறகு அவர் திருவண்ணாமலை அருகே இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து வடபொன்பரப்பி காவல்துறையினர் விரைந்து சென்று சீனு-வை கைது செய்து விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர்.