அமைச்சரின் கணவருக்கு அரஸ்ட் வாரண்ட்!
அவதூறு வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகாத பிரபல சினிமா இயக்குனரும் ஆந்திர மாநில அமைச்சர் ரோஜாவின் கணவருமான ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஆர்.கே.செல்வமணி. கேப்டன் பிரபாகன், புலன் விசாரணை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர். இவர் நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவின் கணவராகவார். இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே.செல்வமணி மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ அருள் அன்பரசு ஆகியோர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தனர். அப்போது, பைனான்ஸ்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை போத்ரா தொடர்ந்தார்.
போத்ரா இறந்த பின்னர், இந்த வழக்கை அவரது மகன் ககன் போத்ரா நடத்தி வருகிறார். இந்த வழக்கு 15 வது மாஜிஸ்திரேட்டு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.கே.செல்வமணி நேரில் ஆஜராக வில்லை. அவர் சார்பில் வழக்கறிஞர்கள் கூட யாரும் ஆஜராக வில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறபித்த நீதிபதி, விசாரணையை வருகிற செப்டம்பர் 22 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிக்க:வேளச்சேரி இரயில்கள் கடற்கரைக்கு செல்லாது!