பட்டப்பகலில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய காதலன்... 

சென்னையில் காதல் விவகாரத்தால் கல்லூரி மாணவியை காதலன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டப்பகலில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய காதலன்... 

சென்னை குரோம்பேட்டை பாரதிபுரம் பகுதியைச் செர்ந்த கல்லூரி மாணவி ஸ்வேதா (20) தாம்பரம் தனியார் கல்லூரியில் மருத்துவ ஆய்வக தொழிற்நுட்பப் படிப்பு (Medical Lab Technician) படித்து வருகிறார். 

இந்நிலையில் இன்று வழக்கம்போல் கல்லூரி முடிந்து தாம்பரம் ரயில் நிலையம் அருகே ஸ்வேதா வந்துகொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த இளைஞர் ஒருவர், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்வேதாவின் வயிறு மற்றும் கழுத்துப் பகுதிகளில் குத்தினார். ஸ்வேதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அந்த இளைஞரை பிடிக்க முற்பட்டபோது அந்த நபர் தான் வைத்திருந்த கத்தியால் தனது கழுத்தில் குத்திக்கொண்டார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சேலையூர் போலீசார் இருவரையும் உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே கல்லூரி மாணவி ஸ்வேதா உயிரிழந்தார். மாணவியை கத்தியால் குத்திய நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கல்லூரி மாணவி ஸ்வேதாவை கத்தியால் குத்திய நபர் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பதும் இவர், செங்கல்பட்டு அருகே உள்ள தனியார் கார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. 

மேலும், ராமச்சந்திரனும் ஸ்வேதாவும் காதலித்து வந்ததாகவும், சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஸ்வேதா, ராமச்சந்திரனுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில்தான் இன்று கல்லூரி மாணவி ஸ்வேதாவை வழிமறித்து தன்னிடம் பேச வற்புறுத்தியதாகவும், பின் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் தான் வைத்திருந்த கத்தியால் ஸ்வேதாவை குத்தி கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை காதலன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இச்சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.