பெட்ரோல் பங்கில் புகுந்து பணம், செல்போன் திருட்டு..! சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்கள்..!

வத்திராயிருப்பு பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், பணம் மற்றும் செல்போனை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பெட்ரோல் பங்கில் புகுந்து பணம், செல்போன் திருட்டு..! சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்கள்..!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு - கூமாப்பட்டி சாலையில் மோகன் என்பவர், சத்யா மோகன் இன்டியன் ஆயில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இந்த பங்கில் ஐந்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு, 4 ஊழியர்கள் இரவு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மறுநாள், அதிகாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்கிற்குள் வந்து, வாகனத்தை நிறுத்திவிட்டு பின்னர் அங்குள்ள அறைக்குள் செல்கின்றனர். அப்போது 2 ஊழியர்கள் தூங்கிகொண்டிருந்த நிலையில், உள்ளே செல்லும் ஒருவர் பங்கில் விற்பனை செய்த பணப்பையை எடுத்துச் செல்கிறார். பின்னர் மற்றொருவர் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அருகே இருந்த செல்போனையும் எடுத்து செல்கிறார். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. 

பின்னர் ஊழியர்கள் எழுந்து பார்த்தபோது பணப்பை இல்லாததால், உடனே சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் இருவர் பணப்பை மற்றும் செல்போனை எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இந்த பையில் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் இருந்ததாகவும், மேலும் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை திருடி சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் பெட்ரோல் பங்க் மேலாளர் சுரேஷ்   புகார் அளித்துள்ளார். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு வத்திராயிருப்பு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.