சுக்குநூறான தற்கொலை நாடகம்... கணவனை கொன்ற கொடூர மனைவி கைது..

  சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை,  மனைவியே கட்டையால்  அடித்துக் கொடூரமாக கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.  

சுக்குநூறான தற்கொலை நாடகம்...  கணவனை கொன்ற கொடூர மனைவி கைது..

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட புள்ளாக் கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் தயானந்த். இவர் நிதி நிறுவனம் நடத்திக் கொண்டு கார் மற்றும் மினி டெம்போ வாடகைக்கு விட்டு வந்துள்ளார். தயானந்த்-க்கும் சேலத்தை சேர்ந்த அன்னப்பிரியாவுக் கும் கடந்த 4 வருடங்களுக்கு திருமணம் நடைபெற்று 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் தயானந்திடம் ஒட்டுநராக  ராஜா என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் தினமும்  வரவு செலவு கணக்குகளை அன்னப்பிரியாவிடம் ஒப்படைத்து வந்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

தயானந்த் வெளியில் சென்றவுடன்,  ராஜா உடன் அன்னப்ரியா தினமும்  உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதனிடையே இவர்களுடைய கள்ளகாதல் விவகாரம் கணவனுக்கு தெரியவரவே, மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும் கணவனின் சொல்லுக்கு அடங்காமல் கள்ளக்காதலில் மூழ்கி கிடந்த அன்னப்ரியா, கள்ளக்காதலை விடுவதாக இல்லை. ஆனாலும் இவர்களின் கள்ளக்காதல் வெளியில் தெரிந்தால் அவமானம் ஏற்பட்டு விடும் என தயானந்த் மனைவியை மீண்டும் கண்டித்து வந்துள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த இருவரும், தங்களுக்கு  இடையூறாக இருந்து வரும் தயானந்தை கொலை செய்து விட்டு தாங்கள் இருவரும் உல்லாசமாக இருக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இரவு பணி முடிந்து வீட்டுக்கு வந்த தயானந்த் சிறிது நேரத்திலேயே தூங்கியுள்ளார். ஏற்கனவே கொலை செய்வதற்கு திட்டம் போட்டு வெளியில்  உருட்டு கட்டையுடன் காத்திருந்த கள்ளக்காதலன் ராஜா. தயானந்த் தூங்கியதை அறிந்து, உள்ளே அன்னப்ரியாவுடன் சேர்ந்து தலையில் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளான். இதையடுத்து கொலையை தற்கொலை என மாற்ற வேண்டும் என்பதற்காக உறவினர்களை தொடர்பு கொண்ட அன்னப்ரியா கணவனுக்கு வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு பதறிப் போய் வீட்டுக்கு வந்த உறவினர்கள் பேரதிர்ச்சியாய் தயானந்த் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண் டனர். முதற்கட்டமாக உறவினர்களிடம் நடத்திய விசாரணையில் எந்தவித துப்பும்  கிடைக்காததால், என்னசெய்வதென்று தெரியாமல் திணறி வந்தனர்.

இந்நிலையில் அக்கம் பக்கத்தினர் அன்னப்ரியாவின் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரை பிடித்து காவலர்கள் துருவி துருவி விசாரணை நடத்தினர். ஆனால் அவர்களின் விசாரணைக்கும் சற்றும் மசியாத அன்னப்ரியா வலிப்பு வந்து தான் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் அன்னப்பிரியாவிடம் முறைப்படி விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை  கள்ளக்காதலனுடன் கூட்டுச் சேர்ந்து  தலையில் கட்டையால் அடித்து தீர்த்துக் கட்டியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்து தலைமறைவாக இருந்துவரும் கள்ளக்காதலன் ராஜாவை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். தாயின் தகாத உறவினால் தந்தையை இழந்து பச்சிளங் குழந்தை எதுவுமே அறியாமல் பரிதவித்து வருவது காண்போரை கலங்க வைத்துள்ளது.