செல்போன் கடையில் கொள்ளை- 3 பேர் கைது....

தென்காசி அருகே கடையின் பூட்டை உடைத்து 10 லட்சம் மதிப்பிலான செல்போன் மற்றும் 1 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.

செல்போன் கடையில் கொள்ளை- 3 பேர் கைது....

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை அடுத்துள்ள வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி முத்துசாமி, வியாபாரத்தை முடித்துவிட்டு வழக்கம்போல் இரவு கடையை பூட்டிவிட்டு விட்டிற்கு சென்றுள்ளார்.

மறுநாள் காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்துள்ளார். அதில் 10 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் முந்தைய தினம் விற்பனை செய்த ரூபாய் 1 லட்சம் பணம் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக முத்துசாமி புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கடையில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

 அப்போது மூன்று மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைப்பது போல காட்சிகள் பதிவாகிருந்தன. மேலும் அந்த பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் இருந்த செல்போன் சிக்னலை டவர்கள் மூலம் ஆய்வு செய்தனர். அப்போது மதுரையை சேர்ந்த மூன்று நபர்களின் செல்போன் சிக்னல் குறிப்பிட்ட அந்தப் பகுதியில் இருந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் அந்த கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்தனர்.  அதன்பின்னர் மதுரை சென்ற தனிப்படை போலீசார், குற்றவாளிகளான கார்த்திக் பாண்டி (20), சுகுமாரன் (26), சிவசங்கர் (21) ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.