துப்பட்டாவால் காதலனை கட்டிப்போட்ட ரவுடிகள்... 3 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி வாக்குமூலம்...! வழக்கில் அதிரடி திருப்பம்!!

திருட்டு வழக்கில் அதிரடி திருப்பமாக காதலனை துப்பட்டாவால் கட்டிப்போட்டுவிட்டு 3 ரவுடிகளும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கல்லூரி மாணவி வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பட்டாவால் காதலனை கட்டிப்போட்ட ரவுடிகள்... 3 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி வாக்குமூலம்...! வழக்கில் அதிரடி திருப்பம்!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள  கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி, அதே கிராமத்தை சேர்ந்த தனது காதலன் ஹரிகிருஷ்ணன் என்பவருடன் கடந்த 23-ந் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மூக்கையூர் கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பத்மாஸ்வரன், தினேஷ்குமார், மற்றும் அஜித்குமார் ஆகிய 3 ரவுடிகளால் தாக்கப்பட்டு காதலனிடம் இருந்த செல்போன் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டதாக கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த ரவுடிகள் 3 பேரையும் கைது செய்யச் சென்றபோது, அவர்கள் போலீசாரை தாக்கியதாக கூறப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போலீசார் பத்மாஸ்வரனையும், தினேஷ்குமாரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் தப்பியோடிய அஜித்குமாரையும் திருப்பூரில் வைத்து கைது செய்தனர்.

இதற்கிடையே ஊர் திரும்பிய காதலன் ஹரிகிருஷ்ணன் இச்சம்பவத்தால் மனவேதனை அடைந்த நிலையில் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அதேபோல் காதலியான அந்த மாணவியும், தனது வீட்டு தோட்டத்தில் விஷம் குடிக்க முயன்ற போது அவரது பெற்றோர் தடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி, அருப்புக்கோட்டை முதலாவது மாஜிஸ்திரேட்டு மணிமேகலாவிடம் வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில், “தனது காதலனை துப்பட்டாவால் கட்டிப்போட்டு விட்டு தன்னை அந்த 3 ரவுடிகளும் பாலியல் வன்கொடுமை செய்தனர்” என்று கூறி இருப்பதாக தெரியவருகிறது.

இதுவரை இந்த வழக்கு காதல் ஜோடியை தாக்கியது தொடர்பாக நகர்ந்த நிலையில், தற்போது மாணவி அளித்த வாக்குமூலத்தால் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவி அளித்த வாக்குமூலத்தால் இந்த வழக்கில் போலீஸ் உயர் அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி விசாரணை நடத்தி வருவதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் எனவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.