கஞ்சா போதையில் வீச்சரிவாளுடன் தகராறு : பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்!!
திருப்பத்தூரில் கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்டதுடன், வீச்சருவாளுடன் சாலையில் சென்றவர்களுக்கு பீதியை கிளப்பிய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தங்கமணி தியேட்டர் அருகில் சாலையில் கஞ்சா போதையில் வீச்சரிவாளுடன் முகமது ரியாஸ், கல்லூரி மாணவன் சக்திவேல் என்ற இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள கடைகளில் தாக்குதல் நடத்தியுள்ளனர். சாலையில் சென்றவர்களை கையிலிருந்த வீச்சருவாளை காட்டி மிரட்டியும், கிரிக்கெட் ஸ்டெம்ப் வைத்தும் மிரட்டியும், விரட்டியும் வந்துள்ளனர். இதனை அடுத்து சாலையில் சென்றவர்கள் அச்சத்துடனே சென்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
இவர்கள் நடத்திய தாக்குதலில் 2 பேர் காயமடைந்தனர். பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் முகமது ரியாஸை விரட்டி போராடி பிடித்து ஆட்டோவில் ஏற்றி திருப்பத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இருவரும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. முகமது ரியாஸை பிடிக்கும் போது பீட்டர் என்ற காவலருக்கு கையில் லேசான கீறல் ஏற்பட்டது. அய்யனார் என்ற காவலரின் செல்போனும் உடைந்தது.