அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 13ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கில் ஜூன் 14ல் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப் பத்திரிக்கை, அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். 

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி நீதிமன்ற காவலை செப்டம்பர் 15 வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் வழக்கு மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இன்றுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 13ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 7வது முறையாக நீட்டிக்கபடுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: காவிரி கர்நாடகாவின் சொத்து அல்ல...அனைத்து மாநிலங்களுக்கும் காவிரி சொந்தம் - டி.கே.எஸ்.இளங்கோவன்