வெடிகுண்டு வெடித்த வீட்டில், டி.ஐ.ஜி ஆய்வு!

வெடிகுண்டு வெடித்த வீட்டில், டி.ஐ.ஜி ஆய்வு!

மயிலாடுதுறை அருகில் வெடிகுண்டு வெடித்த வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருள்கள் குறித்து தஞ்சை சரக டிஐஜி ஜெயச்சந்திரன் நேரில் ஆய்வு செய்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் பண்டாரவாடை என்ற கிராமத்தில் கலைவாணன் என்பவருக்கு நேற்று முன்தினம் வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு கைகளும் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து வெடிகுண்டு வெடித்த வீட்டை காவல்துறையினர் சீல் வைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் காவல் துறையினர் நடத்திய சோதனையில் வெடிக்காத வெடிகுண்டுகள், குண்டு தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் மற்றும் வெடி மருந்துகள் ஆகியவை வீட்டின் உட்புறம் மற்றும் தோட்டத்தில் இருந்து கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக பெரம்பூர் காவல்  துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தஞ்சை தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் காயத்ரி தலைமையில் தடய அறிவியல் துறை நிபுணர்கள் வெடி மருந்துகளின் மாதிரிகளை சேகரித்து அதனை மேல் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலப் பொருட்களுடன் ஆட்களை கொள்ளும் வகையில் உள்ளே பால்ரஸ் குண்டுகள், இரும்பு ஆணிகள் உள்ளிட்டவையும் தேடுதல் வேட்டையில் கண்டறியப்பட்டது.  இழ தமிழ்நாட்டில் ஏதேனும் குற்றச்சம்பவம் நிகழ மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை சரக டிஐஜி ஜெயச்சந்திரன் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் குறித்து விசாரணை மேற்கொண்டார்.

கடந்த வாரம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து நான்கிற்கும் மேற்பட்ட லைசன்ஸ் இல்லாத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆட்களை கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்ட வெடி குண்டுகள் கிராமத்தின் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் கைப்பற்றப்பட்டு இருப்பதும் தயாரித்தவர் படுகாயம் அடைந்ததும் மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பு மற்றும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:100 அடி பனையில் மது அருந்திய போதை பிரியர் - நீண்ட போராட்டத்துக்கு பின் உயிருடன் மீட்பு