கஞ்சா விற்பனை செய்ய வற்புறுத்தல்: தி.மு.க நிர்வாகி வெட்டிக்கொலை...

கஞ்சா விற்பனை செய்துதரக்கூறி வற்புறுத்தியதால் தி.மு.க நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கொலைச் சம்பவம் நிகழ்ந்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கஞ்சா விற்பனை செய்ய வற்புறுத்தல்:  தி.மு.க நிர்வாகி வெட்டிக்கொலை...

சென்னை டி.பி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத்குமார் (48). இவர் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் பணி செய்து வருவதுடன், தி.மு.க-வில் 102 வது வட்ட அவைத் தலைவராகவும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அண்ணா நகர் போகன் வில்லா பூங்கா வழியாக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சம்பத் குமாரை  இருசக்கர வாகனத்தில் வந்த 7 நபர்கள் வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

இந்த கொலைச் சம்பவம் குறித்து அண்ணா நகர் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பியோடிய நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிகுமார்(21), ஜங்குபார்(21), மோகனவேல்(21), நவீன்குமார்24, ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஹரிகுமார் என்பவரின் தந்தை மற்றும் சகோதரர் மீது சம்பத் குமார் பொய் வழக்கு கொடுத்து கடந்த 7 மாதத்திற்கு முன்பு சிறைக்கு அனுப்பியதாகவும், சம்பத்குமார் தங்களை தொடர்ந்து தண்ணீர் கேன் போட சொல்லியும், கஞ்சா பொட்டலத்தை விற்று கொடுக்குமாறும் கூறி தொல்லை கொடுத்து வந்ததாகவும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும், அப்படி விற்று கொடுக்கவில்லை என்றால் பொய் வழக்கு கொடுத்து சிறைக்கு அனுப்பிவிடுவேன் என சம்பத் குமார் மிரட்டி வந்ததாகவும் அதன் காரணமாகவே சம்பத் குமாரை கொலை செய்ததாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து தலைமறைவாக உள்ள ரகு உட்பட மூவரை போலீசார் தேடி வருகின்றனர். சம்பத் குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.