ஆண் நண்பருடன் பேசுவதை கண்டித்த தந்தை... மகளே மாஸ்டர் பிளான் போட்டு கூலிப்படை வைத்து கொன்ற பயங்கரம்...

ஆண் நண்பருடன் சேர்ந்து மாஸ்டர் டிகிரி படித்த மகளே மாஸ்டர் பிளான் போட்டு கூலிக்கு ஆள் வைத்து தந்தையை கொன்றது அம்பலமாகியுள்ளது.

ஆண் நண்பருடன் பேசுவதை கண்டித்த தந்தை... மகளே மாஸ்டர் பிளான் போட்டு கூலிப்படை வைத்து கொன்ற பயங்கரம்...

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் குமார்சங்கர் எலெக்ட்ரிசியனான இவர் ரீத்தாபுரம் பேரூர் தி.மு.க கிளை செயலாளராக இருந்து வருகிறார் இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.

குமார்சங்கர் கழிந்த திங்களன்று சுமார் 8-மணியளவில் வேலைக்கு சென்று வீடு திரும்பிய நிலையில் குமார்சங்கர் வீட்டிற்கு கையில் பையுடன் குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் விற்பனைக்கு மது இருக்கிறதா என கேட்டுள்ளார். குமார்சங்கர் இங்கு யாரும் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடுவது கிடையாது என அந்த வாலிபரை விரட்டியதோடு அந்த வாலிபர் எங்கு செல்கிறார் என பார்க்க குமார்சங்கர் தனது வீட்டு முன் உள்ள சாலையில் அந்த வாலிபரை பின் தொடர்ந்துள்ளார்.

சாலையில் வைத்து குமார்சங்கரை வழிமறித்து அந்த வாலிபர் அரிவாள் மற்றும் கத்தியால் குமார்சங்கரின் தலை கழுத்து மற்றும் முதுகு பகுதிகளில் அரிவாளால் சரமாரி வெட்டி சாய்த்து தப்பியோடிய நிலையில், குமார்சங்கரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் காணப்பட்டார் குமார்சங்கர்.

சம்பவ இடத்திற்கு வந்த குளச்சல் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திய குளச்சல் டிஎஸ்பி தங்கராமன் கொலை செய்து தப்பியோடிய மர்ம நபரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டார். தொடர்ந்து கொலைக்கு ஏதேனும் முன் விரோதம் காரணம் இருக்குமா என்ற கோணத்தில் அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களிடம் விசாரணை நடத்தினர். கொலை குறித்து கதறி அழுதபடியே பேட்டியளித்த குமார்சங்கரின் மூத்த மகள் தீபாவதி,

குமார்சங்கர் வெளியில் நின்று போன் பேசிக் கொண்டு இருந்ததாகவும், அப்போது வந்த ஒரு நபரிடம் பேசிக் கொண்டிருந்ததாகவும் கூறினார். பிறகு திடீரென்று, என்னை குத்திட்டாங்க ஓடி வா என்று குமார் சங்கர் அலறியதாகவும், வெளியே சென்று பார்த்தபோது, அவரது அப்பா ரத்த வெள்ளத்தில் இருந்ததாகவும், அவர் பேசிக்கொண்டிருந்த நபர் ஓடியதாகவும் கூறினார்.  தீபாவதி, திரும்பத் திரும்ப இதையே சொல்லியதால், சந்தேகமடைந்த போலீசார், அவரது சொல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர். 

அப்போது, தீபாவதி திக்கணம்கோடு பகுதியை சேர்ந்த 19 வயதான கோபு என்பவருடன் கொலை நடக்கும் முன்பு பேசியிருப்பதை கண்டு பிடித்தனர். இதனையடுத்து கோபுவை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கோபு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் குளச்சல் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து கொண்டிருந்த போது கொலையான குமார்சங்கரின் மூத்தமகள் தீபாவதி பி.எட் பயிற்சிக்காக அந்த பள்ளிக்கு சென்றதாகவும் இதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. தீபாவதி தற்போது எம்.எட் முடித்து திக்கணம்கோடு பகுதியில் உள்ள கணினி பயிற்சி பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். அதே பள்ளியில் கோபுவும் கணினி பயிற்சி எடுத்து வருகிறார்.

இந்நிலையில் ஆண் நண்பர்களுடன் செல்போனில் பேசுவதை அறிந்த குமார்சங்கர் தினமும் குடிபோதையில் வந்து தங்களை அடித்து துன்புறுத்துவதாகவும், இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் எனவும் நீதான் உதவி செய்ய வேண்டும் என கோபுவிடம் கேட்ட தீபாவதி, அவரை கொலை செய்ய ஏதாவது திட்டம் உள்ளதா எனவும் கேட்டுள்ளார்.

இதற்கு சம்மதித்த கோபு, தீபாவதியுடன் சேர்ந்து குமார்சங்கரை உணவில் விஷம் வைத்து தீர்த்து கட்ட திட்டம் தீட்டியுள்ளனர். விஷ மாத்திரைகள் கிடைக்காத நிலையில் கூலிப்படையை ஏவி கொலை செய்ய திட்டம் தீட்டி திட்டத்தின்படி கோபு, அடியாள் வேலைக்கு செல்லும் மூவர்நகர் நகரை சேர்ந்த தனது நண்பரான ஸ்ரீமுகுந்தன் என்ற வாலிபரை குமார்சங்கரை கொலை செய்ய 60 ரூபாய்க்கு பேசி முடித்துள்ளனர். 

திட்டமிட்டபடி கொலையை அரங்கேற்ற தீபாவதி தனது வீட்டிற்கு வந்து செல்லும் பாதைகளையும், பிடிபடாமல் தப்பி செல்வது எப்படி என்றும் ஸ்ரீமுகுந்தனுக்கு மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டு கொடுக்க, கோபு கொலை சம்பவத்திற்கு முந்தைய நாள் குமார்சங்கரை அடையாளம் காட்டி கொடுத்துள்ளார்.

திட்டமிட்டபடி திங்கள் இரவு பிளாக்கில் மது வாங்க வந்தவர் போல் கையில் அரிவாளை மறைத்து வைத்தபடி, குமார்சங்கர் வீட்டிற்கு வந்த ஸ்ரீமுகுந்தன் அவரிடம் வம்பிழுத்து சாலைக்கு அழைத்து சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த திடுக்கிடும் சம்பவத்தையும் கோபு போலீசாரிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து மாஸ்ஸ்டர் பிளான் போட்டு தந்தையை கூலி கொடுத்து கொலை செய்த தீபாவதி அவரது நண்பர் கோபு மற்றும் கொலை செய்து தப்பியோடிய தூத்துக்குடி மாவட்டம் உவரியில் மறைந்திருந்த ஸ்ரீமுகுந்தன் ஆகியோரை கைது செய்த போலீசார் ஸ்ரீமுகுந்தனிடம் இருந்து 5000-ரூபாயையும் பறிமுதல் செய்து கொலை வழக்கு பதிவு செய்து மூவரையும் சிறையிலடைத்தனர்

சந்தேகத்தில் தன்னையும் தாயையும் அடித்து கொடுமை படுத்திய தந்தையை மாஸ்டர் டிகிரி படித்த மகளே மாஸ்டர் பிளான் போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.