பிச்சைக்காரரிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு... தலையில் கல்லைப்போட்டு தாக்குதல்...

கோவையில் சாலையோரம் படுத்து இருந்த பிச்சைக்காரர் ஒருவரின் தலையில் கல்லைப் போட்டு தாக்குதல் நடத்திய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பிச்சைக்காரரிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு... தலையில் கல்லைப்போட்டு தாக்குதல்...

கோவை காந்திபுரம் ராம்நகர் அன்சாரி வீதியில் சாலையோரம் உள்ள பிளாட்பாரத்தில் வசிப்பவர் ராஜன்(60). பிச்சையெடுத்து வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருக்கும் இவர் நேற்று இரவு அங்குள்ள பிளாட்பாரம் அருகே  படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது நள்ளிரவில் குடிபோதையில் வந்த சிலர், ராஜனிடம் மதுகுடிக்க பணம் தருமாறு கேட்டுள்ளனர். அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார்.  அப்போது அவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் ராஜனை தாக்கி கீழே தள்ளியுள்ளனர். மேலும், கீழே கிடந்த கல்லை தூக்கி அவரது தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் ராஜன் வலியால் அலறி துடித்தார். அந்த வழியாக வந்தவர்கள் இதனை பார்த்து காட்டூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தானநிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் விசாரணையில், ராஜனுடன் சாலையோரம் தங்கி பிச்சை எடுத்து வந்த  தந்தை மகன் உள்பட 4 பேர், ராஜனின் தலையில் கல்லைப்போட்டு கொல்ல முயன்றது தெரியவந்தது. போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.