செங்கல்பட்டில் இரவு நடந்த இரட்டை கொலை: போலீசார் மீது நாட்டுவெடிகுண்டு வீசிய 2 ரவுடிகள் என்கவுன்டர்...
செங்கல்பட்டில் இரவு நடந்த இரட்டை கொலையில் தொடர்புடைய இரண்டு ரவுடிகளை காவல்துறையினர் என்கவுண்டர் மூலம் சுட்டுகொன்றனர்.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நகர காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றில் கையெழுத்து போட்டுவிட்டு, செங்கல்பட்டு கே.தெரு பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற அப்பு கார்த்திக் டீ குடிக்க வந்துள்ளார்.
அப்போது ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் கார்த்திக் மீது நாட்டு வெடிகுண்டு வீசியும் அவரை கத்தியால் சரமாரியாக வெட்டி தலையை சிதைத்துவிட்டு தப்பியோடிவிட்டது . அதன்பின்னர் அந்த கும்பல் செங்கல்பட்டு மார்க்கெட் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் சீனுவாசன் என்பவரது மகன் 22வயதான மகேஷ் என்பவரையும் சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பியோடியது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து இருவரது உடலையும் மீட்ட செங்கல்பட்டு நகர போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கும்பல் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதனையடுத்து இரட்டை கொலை தொடர்பாக ரவுடிகள் மொய்தீன் மற்றும் தினேஷ் ஆகியோரை கைது செய்ய முயன்றபோது காவல்துறையினர் மீது நாட்டுவெடிகுண்டு வீசியதால் தற்காப்புகாக போலீசார் என்கவுண்டர் செய்தனர்.இதனால் இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.இந்த சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.