வாங்கிய கேக்கிற்கு காசு கேட்ட கடை உரிமையாளர்... கடையை அடித்து நொறுக்கிய போதை ஆசாமிகள்!! நடந்தது என்ன?
கேக் வாங்கியதற்கான பணத்தை கேட்டதால் போதை ஆசாமிகள் கடையை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியை சேர்ந்தவர் முகமது அலி. இவர் அதே பகுதியில் சொந்தமாக ஸ்வீட் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். எப்போதும் இவர் கடையில் நல்ல வியாபாரம் நடக்கும் என தெரிகிறது.
இந்நிலையில் வழக்கம் போல் முகமது அலி கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு சிலர் கடைக்கு முன்பு ஆட்டோவில் வந்து இறங்கியுள்ளனர். நல்ல மதுபோதையில் இருந்த அவர்கள் முகமது அலி கடைக்கு வந்து 4 கிலோ கேக் கேட்டுள்ளனர்.
இதையடுத்து கேக்கை எடுத்து கொடுத்த கடை உரிமையாளர், அவர்களிடம் பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமிகள் எங்களிடமே பணம் கேட்கிறாயா என்று கூறி, கடையில் இருந்த பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.
தொடர்ந்து ஆட்டோவில் இருந்த அரிவாளை எடுத்து வந்த போதை ஆசாமிகள் முகமதுவை தாக்க முயன்றுள்ளனர். இதனால் அச்சமடைந்த கடை உரிமையார், கூச்சல் போட்டதால் 3 பேரும் ஆட்டோவை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் ஓடிப்போன போதை ஆசாமிகளை விரட்டியதில் ஒருவர் பிடிப்பட்டார். பிடிபட்ட ஒருவரை அருகில் இருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி சென்ற 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.