தனியார் பள்ளியின் இரக்கமற்ற செயலால், தாய் எடுத்த விபரீத முடிவு!

தனியார் பள்ளியின் இரக்கமற்ற செயலால், தாய் எடுத்த விபரீத முடிவு!

செங்கல்பட்டு: பள்ளி நிர்வாகத்தின் தவறால், குடும்பத்தினுள் பிரச்சனை ஏற்பட்டு, தாய் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த சோகண்டி கிராமத்தில்சத்குரு குளோபல் மெட்ரிகுலேஷன் பள்ளி  இயங்கிவருகிறது. சோகண்டி அடுத்த அழகு சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் வேணுகோபால் என்பவரது மனைவி வசந்தகுமாரி தனது நான்கு வயது மகள் யாழினியை மழலைப் பள்ளியில் சேர்ப்பதற்காக சென்றுள்ளார்.

பள்ளியில், 30 ஆயிரம் ரூபாய் கல்வி கட்டணம் கட்ட வேண்டாம் அதில் முதல் தவணையாக 13.500 ரூபாய் கட்டினால் போதும் மீதத்தொகையை சிறிது நாட்களில் கட்டினால் போதும் என பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. பின்னர், மீண்டும், இரண்டு நாட்கள் கழித்து வசந்தகுமாரிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நீங்கள் முழுத்தொகையை கட்டினால் மட்டுமே உங்கள் குழந்தை பள்ளியில் அனுமதிக்கப்படுவாள் எனவே இன்று முழு தொகையும் கட்ட வேண்டும் என கூறியுள்ளனர் பள்ளி நிர்வாகத்தினர். 

இந்த நிலையில் பள்ளிக்குச் சென்ற வசந்தகுமாரி தங்களால் முழு தொகையும் கட்ட முடியாது என்று கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டு எங்களது குழந்தையை அரசு பள்ளியிலேயே சேர்த்துக் கொள்கிறோம் கட்டிய கட்டணத்தை திருப்பி தாருங்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால் பள்ளி நிர்வாகம் 5000 ரூபாயை பிடித்துக்கொண்டு மீதித்தொகை 8500ரூ மட்டும் கொடுத்துள்ளனர். பள்ளி நிர்வாகத்தின் இந்தச் செயலை, கணவரிடம் கூறியுள்ளார். பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், மனமுடைந்த வசந்தகுமாரி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இந்த விபரீத செயலால், 80 சதவீத தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த சம்பவத்தை அறிந்த வசந்தகுமாரியின் உறவினர்கள், பள்ளியினை முற்றுகையிட முயன்றபொழுது காவலர்கள், அவர்களைத் தடுத்து அனுப்பிவிட்டார்கள். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகதீஸ்வரர் மற்றும் போலீசார் பள்ளியில் மேலும் ஏதும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

பள்ளியின் இந்த இரக்கமற்றச் செயலால் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.