பிரபல ரவுடியின் பலே பிளான்.. Execute பண்றதுக்குள்ள தட்டி தூக்கிய காவல்துறை!!.. என்ன பிளான்?
சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடியை கைது செய்ததன் மூலம் நடக்கவிருந்த ஒரு கொலையை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கன்னிகாபுரம் விளையாட்டு மைதானத்தில் அப்பகுதி இளைஞர்கள் சிலர் நேற்று முன்தினம் மாலை விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மணி என்கின்ற ஓசை மணி என்ற நபர் இளைஞர்களிடம் பணம் கேட்டுள்ளார்.
குடிபோதையில் இருந்த அவர், நாளை திருவொற்றியூரில் ஒரு சம்பவம் செய்யப் போகிறேன். அதற்கான பணம் வந்ததும் திருப்பித் தருவதாகவும் கூறியுள்ளார். இளைஞர்கள் பணம் தர மறுக்கவே கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து 5 செல்போன்களை பறித்துச் சென்றுள்ளார்.
இது குறித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், ராயபுரம் பகுதியில் இருந்த ஓசை மணியையும் அவருடன் இருந்த 17 வயது சிறுவனையும் பிடித்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஓசை மணியின் செல்போனை ஆய்வு செய்த போது வாய்ஸ் ரெகார்டிங் பகுதியில் திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திக் என்கின்ற மிச்சர் கார்த்திக் என்பவரை அவரது அலுவலகத்தில் வைத்து கொலை செய்வது தொடர்பாக ஓசை மணி பேசியிருப்பது பதிவாகி இருந்தது. இதையடுத்து அவரும் உடன் இருந்த சிறுவனும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.