ஆற்றில் குதித்து தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட பெண்...எஜமானின் செருப்பருகே காத்திருந்த நாய்...வைரலாகும் வீடியோ!

ஆற்றில் குதித்து தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட பெண்...எஜமானின் செருப்பருகே காத்திருந்த நாய்...வைரலாகும் வீடியோ!

புதுச்சேரி மாநிலம் ஏனாமில் பெண் ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

புதுச்சேரி மாநிலம் ஏனாம் பகுதியைச் சேர்ந்த காஞ்சனா என்பவர், காதல் விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி மாலை 7 மணியளவில் தனது வளர்ப்பு நாயுடன் எதுர்லங்கா பாலத்திற்கு சென்ற காஞ்சனா, அவரது காலணிகளை கழட்டி வைத்து விட்டு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால், காஞ்சனாவின் வளர்ப்பு நாயோ, அவரது முதலாளி தற்கொலை செய்து கொண்டது தெரியாமல் அவரது காலனி அருகே படுத்து கிடந்துள்ளது.

இதையும் படிக்க : மீனாட்சி அம்மன் கோயில் : பொது போக்குவரத்து அனுமதி மனு தள்ளுபடி!

இதனிடையே, வளர்ப்பு நாயுடன் வெளியே சென்ற காஞ்சனா வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் பதற்றமடைந்த அவரது அண்ணன், தனது தங்கையை தேடி சென்றுள்ளார். அப்போது அவரது வளர்ப்பு நாய் காஞ்சனாவின் செருப்பருகே படுத்திருப்பதை கண்ட காஞ்சனாவின் சகோதரர், தனது தங்கை தற்கொலை செய்து கொண்டதை அறிந்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த போலீசார், காஞ்சனாவின் உடலை தேடி வந்த நிலையில் இன்று காலை கோதாவரி ஆற்றங்கரையில் உடல் கரை ஒதுங்கியது. இதனை அடுத்து உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக ஏனாம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், காஞ்சனாவின் வளர்ப்பு நாய் அவரது முதலாளி தற்கொலை செய்து கொண்டது தெரியாமல், அவரது காலனி அருகே நீண்ட நேரம் படுத்திருந்த வீடியோ சமூக வளைதளங்களில் வேகமாக பரவி பார்ப்போரை கண்கலங்க செய்து வருகிறது.