கடன் வாங்கி தர மறுத்த மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது...

திருச்சி அருகே கடன் வாங்கி தர மறுத்த மனைவியை அடித்துக் கொன்ற கணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடன் வாங்கி தர மறுத்த மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது...

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஜே ஜே நகர் பகுதியை சேர்ந்தவர்  அனிதா. இவருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று விவாகரத்து பெற்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோபால் என்பவரை  இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

அனிதா வீட்டு வேலையும்,  கோபால் கொத்தனார் வேலை செய்து வருகிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று குடிபோதையில் வந்த கோபால் அனிதாவிடம் உறவினர்களிடம் கடன் வாங்கி தர சொல்லி கேட்டதாக கூறப்படுகிறது.

அனிதா  மறுக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் கோபால் அனிதாவை வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக  சந்தேகத்தில் இருந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

இந்த இரண்டு விஷயங்களால் அடிக்கடி சண்டை ஏற்பட்டு ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி போதையில் இருந்த கோபால் கேஸ் சிலிண்டரை எடுத்து அனிதாவை தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதனால் நிலை தடுமாறி விழுந்த அனிதா சுயநினைவின்றி  கீழே கிடந்துள்ளார்.

அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த எடமலைப்பட்டி புதூர் போலீசார் அனிதாவை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அனிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கணவர் கோபாலை எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.