மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவன் -விருந்துக்கு வந்த இடத்தில் நடந்த கொடூரம்...

தஞ்சாவூர்  மாவட்டம் பேராவூரணி அருகே விருந்துக்கு சென்ற மனைவியை கணவன் கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவன் -விருந்துக்கு வந்த இடத்தில் நடந்த கொடூரம்...

தஞ்சாவூர் மாவட்டம்  அடுத்த பட்டுக்கோட்டை தங்கவேல் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் திருச்சிற்றம்பலத்தை அடுத்த வாட்டாத்திக்கொல்லைக்காடு கிராமத்தை சேர்ந்த ஜோதி என்பவரை கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துள்ளார். கணவன் மனைவி இருவரும் பட்டுக்கோட்டை கொண்டிக்குளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில் நேற்று ஜோதியின் உறவினரான, பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் வீட்டிற்கு கணவன் மனைவி இருவரும் வந்துள்ளனர். 

அங்கு உள்ள பெருமாள் கோயிலில் இன்று சனிக்கிழமை அதிகாலை கிடா வெட்டு பூஜை நடந்துள்ளது. கிடா விருந்து தயாரான நிலையில் தம்பதியினர் காலை 10 மணி அளவில் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு செல்வதாக தெரிவித்து விட்டு வந்துள்ளனர். ஆனால் கணவர் மணிகண்டன் சிவன் கோயிலுக்குச் செல்லாமல்  ஊமத்தநாடு ஏரிக்கரை வழியாக பேராவூரணி சென்றுள்ளார். அப்போது மனைவி ஜோதி கோயிலுக்கு செல்லாமல் எங்கு செல்கிறீர்கள்? என கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கணவர் அருகில் இருந்த கருவேல மரக்கட்டையை எடுத்து மனைவி ஜோதியின் தலையில் அடித்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதில் மனைவி ஜோதி மூளை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஜோதியில் உடலை   கைப்பற்றி பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஜோதியின் தாயார் காந்தி கூறுகையில், "திருமணம் நடந்து மூன்று மாதமான நிலையில் ஜோதியின் கணவர் மணிகண்டன் சைக்கோ போல் நடந்து கொள்வார். மகளின் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி பிரச்சினை செய்து வந்தார். கூடுதல் நகை பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் எனது மகள் தெரிவித்தார். என கூறினார். மேலும் இக்கொலை சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், கொலையை மணிகண்டன் மட்டும் செய்தாரா ? எதற்காக செய்தார் ? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.