புதுப்பெண் தற்கொலை செய்த வழக்கு... கணவர், மாமனார், மாமியாருக்கு சிறை தண்டனை...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது குடும்பத்தினருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த வினோத்குமார், எலக்ட்ரிசியன். இவருக்கும், குறிஞ்சிப்பாடி வட்டம் கல்குணத்தைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது 20 பவுன் நகை, ரூ.2.50 லட்சத்திற்கு சீர்வரிசைப் பொருட்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவை சீதனமாக கொடுக்கப்பட்டது. மேலும், ஆடி மாத சீராக 4 பவுன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், வினோத்குமாரின் சகோதரி விந்தியா என்பவர் பண்ருட்டியில் வீடு கட்டுவதற்காக சூர்யாவின் 5 பவுன் நகையை அடமானம் வைத்தார். இதற்கு, சூர்யா எதிர்ப்புத் தெரிவித்ததால் அன்று முதல் மாமனார் பழனி, மாமியார் ராஜேஸ்வரி, நாத்தனார் விந்தியா ஆகியோர் தொடர்ந்து விமர்சித்து வந்ததோடு, அவருக்கு குழந்தை இல்லாததையும் குறை கூறி வந்தனர்.
இதனால், கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்றவர் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் வினோத்குமாருடன் அனுப்பி வைத்தனர். அப்போதும், கூடுதலாக 5 பவுன் நகை கேட்டதற்கு 4 பவுன் வழங்கினர். எனினும், அவருக்கு குழந்தை இல்லாததை சுட்டிக்காட்டி 4 பேரும் கொடுமைப்படுத்தி வந்தனர்.
இதனால், மனமுடைந்த சூர்யாக கடந்த 14-3-2018 அன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுரித்து, பண்ருட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர், கோட்டாட்சியர் விசாரணைக்கும் உட்படுத்தப் பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடலூர் அனைத்து மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பு கூறினார். அதில், சூர்யாவை தற்கொலைக்கு தூண்டியதாக வினோத் குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பழனி, ராஜேஸ்வரிக்கு தலா 7 ஆண்டுகளும், விந்தியாவிற்கு இரண்டரை ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், அனைவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததாக அரசு தரப்பு வழக்குரைஞர் க.செல்வபிரியா கூறினார்.