வரதட்சனை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை !!3 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்...

வரதட்சனை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை அளித்து கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வரதட்சனை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை !!3 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கிய  நீதிமன்றம்...

பண்ருட்டி விஎஸ்பி நகரைச் சேர்ந்த வினோத்குமார் எலக்ட்ரீஷியன் வேலையை செய்து வருகிறார். இவருக்கும் குறிஞ்சிப்பாடி கல்குணம் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகள் சூர்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 2017-ஆம் ஆண்டு  திருமணம் நடந்தது.

அப்போது, சூர்யாவின் திருமணத்திற்கு அவரது பெற்றோர் கிட்டதட்ட 30 புவன் நகை, 2.5 லட்சம் பணம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் உள்ளிட்டவற்றை வரதட்சனையாக கொடுத்துள்ளனர். ஆனால், திருமணத்திற்கு பிறகு கணவர் வினோத்குமார், மாமனார் பழனி, மாமியார் ராஜேஸ்வரி, வினோத்குமாரின் சகோதரி வித்யா ஆகியோர் அவ்வப்போது சூர்யாவை திட்டி அதிக வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த சூர்யா  கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து தகவலறிந்த பண்ருட்டி மகளிர் போலீசார் கணவன், மனைவி இருவரையும்  சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.  ஆனால், வீட்டுக்கு சென்றதும் வினேத்குமார் மற்றும் அவரின் குடும்பத்தார் மீண்டும் சூர்யாவை திட்டி கொடுமைபடுத்தியுள்ளனர். இது தொடர்கதையாகவே, மனமுடைந்த சூர்யா 2018-ஆம் ஆண்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது அண்ணன் சிவக்குமார் வரதட்சனை கேட்டு கொடுமை படுத்தியதாக வினோத்குமார் மீது பண்ருட்டி போலீசாரிடம் புகார் செய்தார். வரதட்சனை கேட்டு  தற்கொலைக்கு தூண்டியதாக வினோத்குமார், அவரது தாய், அவரது தந்தை, அவரது சகோதரி ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அனைவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில், நேற்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் நீதிபதி பாலகிருஷ்ணன் சூர்யா தற்கொலைக்கு காரணமாக அமைந்த வினோத் குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், அவரது பெற்றோர் பழனி, ராஜேஸ்வரிக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், அவரது சகோதரி வித்யாவுக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனையும், நான்கு பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய்  அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.