“என்னால முடியல”- கந்து வட்டி பிரச்சனையால் பூச்சி மருந்து குடித்த இளைஞர்:

கந்துவட்டி பிரச்சனையால் பூச்சி மருந்து குடித்து இளைஞர் விபரீத முடிவு எடுத்துள்ளார். தற்கொலை முயற்சிக்கு முன், அவர் எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் பதிவிட்டதால், பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

“என்னால முடியல”- கந்து வட்டி பிரச்சனையால் பூச்சி மருந்து குடித்த இளைஞர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, கொடவனூர் என்ற பகுதியைச் சேர்ந்த, சுரேஷ் என அடையாளம் காணப்பட்ட இளைஞர் ஒருவர், தனிப்பட்ட தேவைகளுக்காக சேட்டு மற்றும் துறை என்பவர்களிடம் கந்துவட்டியாக, 40,000 ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். கடன் பெற்ற சுரேஷ், தான் வாங்கிய 40,000 -த்தை விட, பத்து மடங்கு அதிக பணத்தை வட்டியாகக் கட்டிய பின்னும், மேலும் பணம் கட்ட சொல்லி மிரட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே 40,000 கடனுக்கு, 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வட்டியாகக் கட்டிய சுரேஷால், மேலும் 5 லட்சம் புரட்ட முடியவில்லை என்ற நிலையில், தனது குடும்ப கஷ்டம் காரணமாக பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார் சுரேஷ். மேலும், தான் தற்கொலைக்கு முயற்சி செய்வதற்கு சில நொடிகள் முன்பு தனது செல்போனில், வாக்குமூலம் கொடுத்து வீடியோவாக தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார் சுரேஷ். அதனைப் பார்த்து வந்த அவரது உறவினர்கள், அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சாதாரணமாக தொடங்கிய அந்த வீடியோவில், வாரத்திற்கு 2000 ரூபாய் சம்பள வேலைக்குத் தான் செல்வதாகவும், தனது மனைவியின் தாலி, அவரது நகைகளை விற்று தான் இது வரை தனது கடனை அடைத்ததாகவும் தெரிவித்தார். 40,000த்திற்கு 5-6 லட்சம் ரூபாய் வட்டி கணக்கு காட்டி, அதனை செலுத்த சொல்லி வற்புருத்தியதாகவும் தெரிவித்த நிலையில், தான் வாழ முடியாமல் தவிப்பதாகவும், அதனக்கு உதவி செய்ய யாரும் இல்லாததாகவும் கூறி வருந்தினார்.

பின், தனது பிள்ளையின் பிறந்தநாளுக்காக ஒரு சிறிய துணி கூட வாங்க முடியாமல் தவித்த நேரம், தனது குழந்தயின் பிறந்தநாளை வேறு யாரோ கொண்டாடியதாகவும் கூறி அழத் தொடங்கினார். இது போன்ற பிரச்சனைகளால், தனது மனைவியை அடித்து, அந்த கோவத்தில், மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதாகக் கூறிய சுரேஷிற்கு, அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை எனவும் கூறி கண் கலங்கினார். பின், “என் மனைவியையும், என் பிள்ளையையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள், என்னால் முடியவில்லை. எனக்கு வாழ பிடிக்கவில்லை”  என்று கூறி பூச்சி மருந்தை குடித்து விட்டார்.

தனது வீடியோவில் தெளிவாக என்ன நடந்தது எனக் கூறிய சுரேஷின் வாக்குமூலங்களை வைத்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், இது குறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.