விவாகரத்து தொடர்பாக தங்கை கணவருக்கு சரமாரி வெட்டு.. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல்!!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே, விவாகரத்து பிரச்சினையில் கணவன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் சிலரைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விவாகரத்து தொடர்பாக தங்கை கணவருக்கு சரமாரி வெட்டு.. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல்!!

கீழமாந்தையைச் சேர்ந்த ஆல்பர்ட் என்பவருக்கும் தஞ்சை மாவட்டம் அம்மன் குடியைச் சேர்ந்த  ஆரோக்கிய ஸ்ரீதேவிக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் ஆன நிலையில் 6 மாதங்களுக்குப் பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் ஆஜராகாமல் ஆல்பர்ட் அலைக்கழிப்புச் செய்ததுடன் ஆரோக்கிய ஸ்ரீதேவிக்கு வேறு திருமணம் செய்ய நடந்த ஏற்பாடுகளுக்கும் சிக்கல் ஏற்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கிய ஸ்ரீதேவியின் அண்ணன் ஸ்ரீதர், கடந்த 7-ம்தேதி ஆல்பர்ட்டை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீதர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.  

இந்தநிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆல்பர்ட்  நேற்றிரவு உயிரிழந்தார். ஆனால், இந்த வழக்கில் மேலும் சிலரை கைது செய்யவில்லை என்று குற்றம் சாட்டி ஆல்பர்ட்டின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் 2-மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.