தொழிலதிபரை மிரட்டி பணம்பறித்த இன்ஸ்டா பிரபலம்...! அதிரடியாக கைது செய்த போலீசார்...!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உல்லாசமாக இருக்க அழைத்து தொழிலதிபரை மிரட்டி நிர்வாணப்படுத்தி , வீடியோ எடுத்து பணம், நகை பறித்த இன்ஸ்டா பிரபலம்...!

தொழிலதிபரை மிரட்டி பணம்பறித்த இன்ஸ்டா பிரபலம்...! அதிரடியாக கைது செய்த போலீசார்...!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே கொடுங்கல்லூர் பகுதியை சார்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கத்தால் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இதனிடையே அந்த பெண், தன்னுடைய கணவர் துபாயில் இருக்கிறார் என்றும், தான் மட்டும் வீட்டில் நோய்வாய்ப்பட்ட தாயுடன் தனியாக இருக்கிறேன் என கூறியுள்ளார். மேலும், நீங்கள் தன்னுடைய வீட்டுக்கு வந்தால் உல்லாசமாக இருக்கலாம் என்றும் அந்த பெண், தொழிலதிபரிடம் ஆசை காட்டியுள்ளார். அதை நம்பிய தொழிலதிபர் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக இளம் பெண் கூறியபடி, பாலக்காடு அருகே உள்ள யாக்கரை பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.

அந்த பகுதி அதிக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி ஆகும். அவர் அந்த வீட்டுக்கு சென்றபோது ஒரு இளம்பெண் மட்டும் இருந்துள்ளார். அந்த பெண் அவரை நேராக படுக்கை அறைக்கு அழைத்துள்ளார். அந்த சமயத்தில் திடீரென ஐந்து நபர்கள் வீட்டிற்குள் புகுந்து அவரை மிரட்டி,   நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்துள்ளனர். மேலும் அந்த கும்பல், தங்களுக்கு பணம் தராவிட்டால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். தொடர்ந்து அவரது கழுத்தில் அணிந்திருந்த நான்கு பவன் செயின், செல்போன், ஏடிஎம் கார்டு, கார், பத்தாயிரம் பணம் மற்றும் காரில் இருந்த ஒரு சில ஆவணங்களையும் அந்த கும்பல் கைப்பற்றியது. 

மேலும், பணம் கேட்டு அந்த கும்பல் அவரை மிரட்டி உள்ளனர். அதற்கு அந்த தொழிலதிபர், கொடுங்கல்லூரில் உள்ள தன்னுடைய பிளாட்டுக்கு சென்றால் பணம் எடுத்து தருவதாகக் கூறியுள்ளார். இதை அடுத்து, அந்த கும்பல், அவரை காரில் ஏற்றி கொடுங்கல்லூருக்கு அழைத்து சென்றுள்ளது. ஆனால் வழியில் சிறுநீர் கழிப்பதாக கூறி தொழில் அதிபர் காரிலிருந்து இறங்கியதும் தப்பித்து ஓடியுள்ளார். பின்னர், பாலக்காடு டவுன் தெற்கு காவல் நிலையத்தில் விவரங்களை கூறி புகார் அளித்துள்ளார். பின்னர்  போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். 

இந்த விசாரணையில் இன்ஸ்டா பிரபலம், கண்ணூரை சேர்ந்த கோகுல் தீப் இவரது மனைவி தேவ், கோட்டயம் பகுதியை சேர்ந்த சரத், திருச்சூரை சேர்ந்த அஜித், வினய் மற்றும் ஜிஷ்ணு ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கணவன் மனைவிமான கோகுல் தீப் மற்றும்  தேவ் சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருவதுடன், இன்ஸ்டாவிலும் மிகவும் பிரபலமாக வலம் வருபவர்கள். இந்த கும்பலை சேர்ந்த சரத் என்பவர் தான், பெண் போல தொழிலதிபரிடம் முதலில் சாட் செய்துள்ளார். தொழிலதிபர் தன்னுடைய வலையில் சிக்கியதும், கோகுல் தீப் மற்றும் தேவ்வை சந்தித்து பணம் தருவதாக கூறி இந்த மோசடியில் அவர்களை ஈடுபடுத்தி உள்ளார். மற்ற மூன்று பேரும்  சரத்தின் நண்பர்கள் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும், விசாரணைக்கு பின் ஆறு பேரையும் போலீசார் பாலக்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.