கலாஷேத்ரா விவகாரம்..! ஹரிபத்மன் ஜாமீன் மனு...! காவல்துறை பதிலளிக்க உத்தரவு...!!

கலாஷேத்ரா விவகாரம்..! ஹரிபத்மன் ஜாமீன் மனு...! காவல்துறை பதிலளிக்க உத்தரவு...!!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைதான கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் ஜாமீன் கோரிய மனு மீது காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்தபோது பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முன்னாள் மாணவி ஒருவர் புகார் அளித்தார்.

அதன்படி நடன துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், ஏப்ரல் 3ம் ஹரிபத்மனை தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஹரி பத்மன் தாக்கல் செய்த மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில்,  கண்டிப்பான ஆசிரியரான தன் மீது, பழைய மாணவர்களும், தற்போது படிக்கும் மாணவர்களும் மிகுந்த மதிப்பு வைத்துள்ளதாகவும், தனது வளர்ச்சியை பிடிக்காத சிலர், மாணவிகளைத் தூண்டி விட்டு பொய் புகார் கொடுத்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு முதன்மை நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் செவ்வாய்கிழமைக்கு (ஏப்ரல் 25) தள்ளி வைத்துள்ளார்.