ஆண் குழந்தைப் பிறக்க நரபலி கொடுத்த தந்தை; மத்திய பிரதேசத்தில் நடந்த பயங்கரம்:
மத்திய பிரதேச மாநிலத்தில் ஆண் குழந்தை பிறந்தால், இளைஞன் ஒருவனை பலி கொடுப்பதாக எல்லை அம்மனுக்கு வேண்டியதால், 19 வயது சிறுவனை குடும்பம் நரபலி கொடுத்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேண்டுதல் என்ற பெயரில், இங்கு பலரும் பல விதமான விசித்திர பரிகாரங்களை செய்வது வழக்கமாக வைத்திருக்கின்றனர். அதிலும், ஒரு சில பரிகாரங்களும், வேண்டுதல்களும், தனக்கு மட்டுமின்றி கேள்விபடுபவர்களுக்கும் முகம் சுளிக்கும் விதமாக இருக்கும் வண்ணம் இருக்கின்றன. அந்த வரிசையில், தற்போது, ஒரு நரபலி இணைந்துள்ளது.
மூன்று பெண் குழந்தைகளைப் பெற்ற ராம்லால் என்பவர், 32 வயதானவர். மத்திய பிரதேசம், ரேவா மாவட்டத்தின் பெதோவா கிராமத்தைச் சேர்ந்த இவருக்குத் திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இதனால், தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று, கிராமத்து தெய்வத்தை வழிப்பட்டிருக்கிறார். அப்போது, தன் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தால், இளைஞரை பலி கொடுப்பேன் என்று கிராமத்து தெய்வத்தை வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனை அறிந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து ராம்லாலை போலீஸார் கைது செய்தனர். கியோட்டி பகுதியில் வசிக்கும் 19 வயதான திவ்யான்ஷ் கோல் என்பவரைக் கொன்றதாகத் தகவல்கள் கூறுகின்றன.
போலீசார் ஜூலை 6ம் தேதி அவரது உடலை கண்டுபிடித்த நிலையில், விசாரணைத் தொடரப்பட்டது. அப்போது, இறந்தவர் கடைசியாக ராம்லாலுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து, சிர்மவுர், ரேவா காவல்துறையின் துணைப் பிரிவு அதிகாரி நவீன் திவாரி கூறுகையில், “கடந்த மாதம், அவரது மனைவி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார், அவர் பலிகொடுக்க ஒரு இளைஞனைத் தேடிக்கொண்டிருந்தார். ஜூலை 6 ஆம் தேதி, அவர் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த திவ்யான்ஷைக் கண்டார். ராம்லால் திவ்யான்ஷை உதவிக்கு அழைத்து, கிராமத்தில் உள்ள தேவி கோவிலுக்கு ராம்லாலுடன் வரும்படி கூறினார். ராம்லால் அவரை வெட்டிக் கொன்று, உடலை கோவிலில் விட்டுச் சென்றார்” எனக் கூறினார்.
தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று பல வகையான சடங்குகள் செய்த பிறகும், ஆண் குழந்தைப் பிறக்கவில்லை என்பதால், எந்த வகையான சடங்கு செய்யவும் தயாராகி இருக்கிறார். அப்போது ஒரு பேயோட்டி, நரபலி கொடுக்க வேண்டும், அதுவும் ஒரு இளைஞரை பலி கொடுக்க வேண்டும் என சொன்னதால், இந்த பயங்கர செயலை செய்திருக்கிறார் ராம்லால் எனக் கூறப்படுகிறது.
மேலும், ராம்லால் சூனியம் செய்து வந்ததாக கிராம மக்கள் தெரிவித்த நிலையில், இந்த வழக்கில் பேயோட்டும் நபரின் பங்கு என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
--- பூஜா ராமகிருஷ்ணன்