1.5 கோடி பணம், 200 சவரன் நகை கொடுத்தால் தான் வாழ முடியும்... மனைவியை கொடுமைப்படுத்திய மருத்துவக்கல்லூரி பேராசிரியர்...

சென்னையில் 200 சவரன் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய தனியார் மருத்துவ கல்லூரி பேராசிரியரும் மருத்துவருமான வினோத்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

1.5 கோடி பணம், 200 சவரன் நகை கொடுத்தால் தான் வாழ முடியும்... மனைவியை கொடுமைப்படுத்திய மருத்துவக்கல்லூரி பேராசிரியர்...

சென்னை கொளத்தூர் திருமுருகன் நகரைச் சேர்ந்தவர் வினோத் குமார். மருத்துவரான இவர், வேல்ஸ் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மோனிகா ஸ்ரீ, இந்த தம்பதிக்கு ஏழுமாத குழந்தைகளான அஷ்வத் -  அஸ்வின் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் மோனிகா ஸ்ரீ மருத்துவரான தனது கணவர் மீதும் தனது கணவரின் குடும்பத்தினர் மீதும வரதட்சணை புகார் அளித்திருந்தார். 

கோவையை பூர்வீகமாகக் கொண்ட மோனிகா ஸ்ரீ அவரது பெற்றோருக்கு ஒரே மகள். பொறியியல் முடித்துவிட்டு ஐஏஎஸ் ஆக வேண்டும் என  சென்னையில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் படித்துவந்த நிலையில், மோனிகா ஸ்ரீ, அவரது பெற்றோர் மேட்ரிமோனியல் மூலம் மருத்துவர் வினோத்குமாருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவர்கள் திருமணம் நடப்பதற்கு முன்பு நிச்சயதார்த்தம் நடக்கும் போதே டாக்டர் மாப்பிள்ளை என்பதால் 200 சவரன் நகை போட வேண்டும் என டாக்டர் வினோத் குமார் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. பெண் வீட்டாரோ தங்களிடம் உள்ள கோடிக்கணக்கான சொத்து தங்களது ஒரே மகளுக்கு தான் எனவும், தற்போது 120 சவரன் நகை போடுவதாகவும் பின்னர் 80 சவரன் நகை செய்து தருவதாகவும் கூறி திருமணத்தை முடித்துள்ளனர்.

திருமணம் முடிந்து சென்னைக்கு வந்த பிறகு மோனிகா ஸ்ரீ அவரது கணவரும், கணவரின் குடும்பத்தாரும் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. டாக்டர் வினோத்குமாரின் தந்தை கண்டீபன், தாய் ரமணி, தம்பி கௌஷிக் ஆகியோருடன், அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வினோத் குமாரின் சித்தப்பா பி.ஆர்.ரவி, மாமா நெடுமாறன், பெரியப்பா பார்த்திபன் குடும்பத்தினரும் மோனிகாஸ்ரீயை துன்புறுத்தி வந்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.

டாக்டர் மாப்பிள்ளை என்றால் மருத்துவமனையே சொந்தமாக கட்டி தருவதற்கு தயாராக இருக்கிறார்கள், கேட்ட 200 சவரன் முழுசாக தரவில்லை என தினந்தோறும் துன்புறுத்தி வந்ததாக அந்த பெண்ணையும், அவரது பெற்றோரையும் அசிங்கமாகப் பேசி அவமானப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் மோனிகா ஸ்ரீயின் அனுமதி இல்லாமல் சில மாத்திரைகளை டாக்டர் வினோத்குமார் வலுக்கட்டாயமாக கொடுத்ததாகவும், சில மாதத்தில் கருவுற்ற நிலையில்  மகப்பேறு மருத்துவரிடம் சென்று பரிசோதித்ததில் இரட்டை குழந்தை வயிற்றில் இருப்பது தெரியவந்ததுள்ளது. அந்த தகவலை மகிழ்ச்சியாக தனது கணவரிடம் சொல்லும் போது, தான் கொடுத்த மாத்திரையால் தான் இரட்டை குழந்தை உருவானது என மோனிகா ஸ்ரீயை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார் அவரது கணவர் டாக்டர் வினோத்குமார். 

இதற்கிடையில் பிரசவத்திற்காக தனது பெற்றோர் வீட்டிற்கு மோனிகா ஸ்ரீ சென்றுவிட்டார். அப்போது வினோத் குமாரின் குடும்பத்தினர் பெண் வீட்டாரை தொடர்பு கொண்டு உங்கள் பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்து விடுங்கள் 200 சவரன் நகையுடன் சொந்தமாக மருத்துவமனையை கட்டி தருவதற்கும் நிறைய பேர் இருக்கிறார்கள் என கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அதற்கு மோனிகா ஸ்ரீயின் பெற்றோர் தங்களது ஒரே மகளின் வாழ்க்கை வீணாகிவிடும் மீதமுள்ள 80 சவரன் நகையும் தந்து விடுகிறோம் என கூறி சமாதானம் செய்துள்ளனர்.

சில மாதங்கள் கழித்து மோனிகா ஸ்ரீக்கு இரட்டை குழந்தைகள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்து உள்ளது.  அப்போது வினோத் குமாரின் குடும்பத்தினர் குழந்தையை மட்டும் வந்து பார்த்துவிட்டு சென்னை திரும்பி விட்டனர். மீண்டும் சில மாதம் கழித்து கடந்த ஜூன் மாதம் இரட்டை குழந்தைகளுடன் மோனிகா ஸ்ரீ கணவர் வீட்டுக்கு வந்த நாளிலிருந்து ரூபாய் 1.5 கோடி மருத்துவமனை கட்டுவதற்கும், 80 சவரன் நகை இருந்தால் மட்டுமே இங்கு வாழ முடியும் என மீண்டும் துன்புறுத்தல் செய்து மிரட்டியுள்ளனர். 

மேலும், யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றிருந்த மோனிகா ஸ்ரீ முதன்மை தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்தார். அதற்கும் தடை போட்ட வினோத்குமார் நீ படித்துவிட்டால் தன்னை மதிக்க மாட்டாய் எனவே ஐஏஎஸ் படிக்க கூடாது என கூறியதோடு படிப்பை நிறுத்தினால் மட்டுமே தன்னுடன் சேர்ந்து வாழலாம் என பிளாக்மெயில் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இரட்டை குழந்தைகளை வைத்துக்கொண்டு, கணவர் வீட்டாரின் எல்லாக் கொடுமைகளையும் ஒரு அளவிற்கு மேல் தன்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என கூறும் மோனிகா, கடந்த ஜூலை மாதம் வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில் டாக்டர் வினோத் குமார் அவருடைய பெற்றோர் சித்தப்பா மற்றும் மாமா குடும்பத்தினர் அனைவரும் தலைமறைவாகி விட்டனர் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், டாக்டர் வினோத் குமார் உட்பட 8 பேர் மீது வில்லிவாக்கம் மகளிர் காவல் துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்குப் பதிவு செய்யப்பட்ட மருத்துவர் வினோத் குமார், சித்தப்பா வி.ஆர்.ரவி வேல்டெக் கல்லூரியில் பேராசிரியராகவும், அவரது பெரியப்பா பார்த்திபன் நந்தனம் அரசு கலைக் கல்லூரி பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்த வரதட்சணை புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் தலைமறைவான டாக்டர் வினோத் குமாரின் குடும்பத்தினர் 8 பேரையும் தேடி வருவதாக விசாரணை நடத்தி வரும் வில்லிவாக்கம் மகளிர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.