சாட்சிகளை கலைக்க கொலை முயற்சி...! கூலிப்படையினர் கைது...!!

சாட்சிகளை கலைக்க கொலை முயற்சி...! கூலிப்படையினர் கைது...!!

சொத்து பிரச்சனையில் சாட்சிகளை கலைப்பதற்காக பயங்கர ஆயுதங்களுடன் கொலை செய்ய முயன்ற கூலிப்படையினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அயனாவரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜதேவ்நாத்(21). இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் சிமெண்ட் கடையை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல ராஜதேவ் நாத் கடையில் இருந்த போது, இரண்டு வாலிபர்கள் முககவசம் அணிந்து கடைக்கு வந்து, செல்போன் பேசிய படியே சிமெண்ட் விலை குறித்து ராஜதேவ் நாத்திடம் விசாரித்துள்ளனர். பின்னர் திடீரென அவர்கள் இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த சுத்தியல் மற்றும் கோடாரி ஆகிய ஆயுதங்களை கொண்டு ராஜதேவ் நாத்தை தாக்கி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். கஞ்சா வாசனையால் முன்னதாகவே சுதாரித்து கொண்ட ராஜதேவ்நாத் கூலிப்படையினர் தாக்க வரும் போது கடைக்குள் புகுந்து நூலிழையில் உயிர் பிழைத்து தப்பி ஓடியதால், ஆத்திரத்தில் இரண்டு நபர்களும் தப்பிச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அயனாவரம் காவல் நிலையத்தில் ராஜதேவ் நாத் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்தில் வந்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொலை செய்வதற்காக வந்த நபர்கள் விட்டுச்சென்ற செல்போனை போலீசார் பறிமுதல் செய்து, விசாரணை நடத்திய போது  அந்த செல்போன் தூத்துக்குடி கூலிப்படையை சேர்ந்த செந்திலுடையது என்பதும் அதில் கடைசியாக பேசிய செல்போன் எண்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அயனாவரம் மேட்டு தெருவில் வசித்து வரும் ஜெய்சிங்கிற்கு சொந்தமான 2கோடி நிலம் தொடர்பாக குடும்பத்தினருக்குள் ஏற்பட்ட தகராறில், கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி ஜெய்சிங் மற்றும் அவரது மகள் சங்கீதா ஆகிய இருவரையும் ஜெய்சிங்கின் மகன் ஹரிநாத் என்பவர் கத்தியால் வெட்டி தாக்குதல் நடத்தி உள்ளார். இந்த வழக்கில் ஹரிநாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த ஹரிநாத் தூத்துக்குடி ஏரல் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணை இன்று அல்லிக்குளம் மகிளா நீதிமன்றத்தில் வர உள்ளதால், ஹரி நாத்திற்கு எதிராக அவரது உறவினர் பொன்னிலா(53) என்பவர் சாட்சியளிக்க உள்ளார். இதனால் சாட்சியளிக்க விடாமல் தடுப்பதற்காக  தூத்துக்குடியில் இருந்த ஹரிநாத் கூலிப்படையை ஏவி உறவினர் பொன்னிலாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். திட்டமிட்டப்படியே கூலிப்படை தலைவன் கோகுல்  மூலமாக உறவினர் பொன்னிலாவை தீர்த்துக்கட்ட செந்தில், விக்னேஷ் ஆகியோர் சென்னைக்கு வந்துள்ளனர்.

கடையில் பொன்னிலா இல்லாததால் பொன்னிலாவின் மகன் ராஜதேவ் நாத்தை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. அப்போது சம்பவ இடத்தில் தவறவிடப்பட்ட கூலிப்படையை சேர்ந்த செந்திலின் செல்போன் மூலமாக போலீசார் துப்பு துலங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக ஹரி நாத், கூலிப்படை தலைவன் கோகுல், செந்தில், விக்னேஷ் ஆகிய நான்கு பேரை அயனாவரம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் போலீசார் விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.  சாட்சிக்கு வராமல் தடுக்க கூலிப்படையை ஏவி உறவினரையே கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.