

மெட்டா நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு துறையின் மேலாளரை பாலியல் தொல்லை புகாரின் காரணமாக மெட்டா பணி நீக்கம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Facebook-இன் தாய் நிறுவனமாக விளங்கும் மெட்டா உலகளாவிய சமூக மேம்பாட்டுத் துறையின் மேலாளரை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த திடீர் பணியிடைநீக்கம் குறித்து மெட்டா நிறுவனம் பேசியுள்ளது. அதில், தன்னை விட வயது குறைந்த 13 வயது சிறுவனிடம் பாலியல் ரீதியாக சாட் செய்தது குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து யூடியூப், ரெடிட் போன்ற சமூக வலைத்தளங்களில் பாலியல் ரீதியாக சாட் செய்யப்பட்ட வீடியோ வைரல் ஆன பிறகு, ஜெரன் ஏ மைல்ஸ் பணியைத் தொடர மெட்டா நிறுவனம் அனுமதிக்கவில்லை என நிறுவனம் டெக் கிரஞ்ச் தளத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சிறுவர்களை குறி வைத்து பாலியல் குற்றங்களை நிகழ்த்தும் நபர்களுக்கு தங்கள் நிறுவனத்தில் ஒருபோதும் இடமில்லை என மெட்டா நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுபோன்ற நபர்களை கண்டறிய சிறப்பு தனிக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.
இது குறித்து மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ’’இந்த குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை மிகைப்படுத்த முடியாததால், அதற்கு காரணமான நபரை பணியில் இருந்து நிறுவனம் நீக்கிவிட்டது. இந்த சூழ்நிலையை நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். இது குறித்த கூடுதல் தகவல்களை இப்போது கூற முடியாது’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.