தீரன் பட பாணியில் அரங்கேறிய பயங்கர சம்பவம்...துப்பாக்கி சூடு நடத்தி நகை, பணம் கொள்ளை

துப்பாக்கி சூடு நடத்தி நகை, பணம் கொள்ளை...

தீரன் பட பாணியில் அரங்கேறிய பயங்கர சம்பவம்...துப்பாக்கி சூடு நடத்தி நகை, பணம் கொள்ளை

அரக்கோணம் அருகே நள்ளிரவில் துப்பாக்கியால் சுட்டு நகை பணம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அவினாசிகண்டிகை கன்னிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆடிட்டர் புஷ்கரன். இவர் கிராமத்திற்கு வெளியில் தங்களுக்கு சொந்தமான வயலின் நடுவில் தனியாக வீடுகட்டி தனது தாய் சுதா, பெரியம்மா லதா, பாட்டி ரஞ்சிதம்மாள் ஆகியோருடன் வசித்து வருகின்றார். இந்த நிலையில், நள்ளிரவில் வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டு திறந்தபோது முகமுடி அணிந்த 4 மர்மநபர்கள் நாட்டு துப்பாக்கியால் ஜன்னல் வழியாக சுட்டு உள்ளே நுழைந்தாக கூறப்படுகிறது.

பின்னர் பெண்கள் அணிந்திருந்த மற்றும் வீட்டிலிருந்த 25 சவரன் தங்க நகைகள் பணம் 60 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து கொண்டு வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி சென்றதாக தெரிகிறது. இதனையடுத்து நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த புஷ்கரன், சுதா, லதா மற்றும் ரஞ்சிதம்மாள் உட்பட நால்வரும் அரக்கோணம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர்,  மேல் சிகிச்சைக்கு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அரக்கோணம் நகர காவல்துறையினர் விசாரனை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகள் பேசியதாக கூறப்படுகிறது. இவர்கள் வட இந்திய கொள்ளையர்களா என்ற கோணத்தில் விசாரனை நடத்தி வருகின்றனர். தீரன் திரைப்பட பாணியில், அரங்கேறிய இந்த பயங்கர சம்பவத்தால், அரக்கோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.