மது அருந்துவதற்கு பணம் இல்லாததால் சொந்த அத்தையை கொலை செய்த அண்ணன் மகன்...!

புதுச்சேரியில் பணம் மற்றும் நகைக்காக சொந்த அத்தையை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மது அருந்துவதற்கு பணம் இல்லாததால் சொந்த அத்தையை கொலை செய்த அண்ணன் மகன்...!

புதுச்சேரி லாஸ்பேட்டை , சாமிபிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி அஞ்சலை. இவர் கடந்த 5 ஆம் தேதி தனது வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருந்தார், இது தொடர்பாக லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது கடலூரில் வசிக்கும் அஞ்சலையின் அண்ணன் மகன் சுரேஷ் தான் கடைசியாக வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. ஆனால் அவர் தலைமறைவாக இருந்ததால், அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து வடக்கு காவல் கண்காணிப்பாளர் பக்தவத்சலம் தலைமையில் மூன்று தனிப்படைகள் கொண்ட குழு அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், சந்துரு என்பவரின் வீட்டில் வைத்து கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.  

விசாரணையில் அதிக அளவில் மது அருந்தி வந்த சுரேஷ் தனது மனைவியிடமிருந்து பிரிந்து, கடலூரில் உள்ள தனது தந்தை உடன் வசித்து வந்துள்ளார். அவ்வபோது மது அருந்தவதற்காக தன் தந்தையிடமே  திருடி வந்த சுரேஷ், ஒரு கட்டத்தில் அது முடியாமல் போகவே, புதுச்சேரியில் தனியாக வசித்து வந்த தனது அத்தை வீட்டிற்கு நலம் விசாரிக்க செல்வது போன்று சென்று அத்தை அஞ்சலையின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்த நகை மற்றும் பணத்தை பறித்து சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சுரேஷிடம் இருந்து தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்,

இருப்பினும் மது அருந்த பணம் இல்லாததால் சொந்த அத்தையை கொலை செய்த அண்ணன் மகனின் செயல் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.