விவகாரத்தான பெண்கள் தான் குறி... மேட்ரிமோனி மூலமாக ஸ்கெட்ச் போட்ட நைஜீரியா இளைஞர்கள்!! டெல்லியில் வைத்து தூக்கிய போலீஸ்

மேட்ரிமோனி மூலமாக விவகாரத்தான பெண்களை குறிவைத்து, நூதன முறையில் பணம் பறித்த நைஜீரியாவை சேர்ந்த இருவரை டெல்லியில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

விவகாரத்தான பெண்கள் தான் குறி... மேட்ரிமோனி மூலமாக ஸ்கெட்ச் போட்ட நைஜீரியா இளைஞர்கள்!! டெல்லியில் வைத்து தூக்கிய போலீஸ்

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் நடந்து விவகாரத்தான நிலையில் மறுமணம் செய்து கொள்வதற்காக மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ளார். மேட்ரிமோனியை பார்த்து அப்பெண்ணை தொடர்புகொண்ட நபர் ஒருவர் தான் நெதர்லாந்தில் மருத்துவராக பணிப்புரிவதாகவும், நம்ப வைக்க ஆப்ரேஷன் செய்வது போன்ற புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார்.

மேலும் தனக்கும் விவகாரத்தானதால் ஒரு பெண்ணை தேடி வருவதாகக் கூறி பெரம்பூரைச் சேர்ந்த பெண்ணிடம் பழகி வந்துள்ளார். நாளடைவில் அவர்களின் பழக்கம் காதலாக மாறி இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். 

இதனையடுத்து  லேப்டாப் பரிசு ஒன்றை சென்னைக்கு அனுப்பி இருப்பதாக அந்த நபர் தெரிவித்துள்ளார். சிறிது நாட்கள் கழித்து கொரியர் கம்பெனியில் இருந்து பேசுவதாகக் கூறி உங்களுக்கு பார்சல் வந்துள்ளது எனவும், பொருளுக்கு உண்டான ஜி.எஸ்.டி தொகை 30 ஆயிரம் ரூபாயை செலுத்திவிட்டு பொருளைப் பெற்றுக்கொள்ளலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர் . இதனை நம்பி வங்கி கணக்கு மூலமாக பணம் அனுப்பிய போதும் பெண்ணுக்கு லேப்டாப் வந்து சேரவில்லை. 

இதேபோல் பல முறை வைர மோதிரம், நெதர்லாந்து பணமாக 1 கோடி பரிசில் வந்திருப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி சென்னை பெண்ணிடம் பல லட்சம் பணம் பறிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அந்தப் பெண் மேட்ரிமோனி நிறுவனத்தை அணுகி கேட்டபோது அது மோசடி கும்பலின் செயல் என தெரியவந்தது. 

இதனையடுத்து தன்னை ஏமாற்றி 4.15 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட பெண் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தபோது இதே போல் விவகாரத்தான 15-க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த மோசடியில் சிக்கி பணத்தை இழந்து புகார் அளித்திருப்பது தெரியவந்தது. 

இதனையடுத்து  அந்த மோசடி கும்பலுக்கு பணம் அனுப்பிய வங்கிக் கணக்கை போலீசார் ஆய்வு செய்தபோது ஒரு பிரபல வங்கியில் கணக்கு தொடங்கி அதன் மூலமாக பணபரிவர்த்தனைகள் நடந்திருப்பது தெரியவந்தது. மேலும் போலியாக உருவாக்கப்பட்ட மேட்ரிமோனி வெப்சைட் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கும்பல் விவகாரத்தாகி இரண்டாவது திருமணத்திற்கு வரன் தேடும் ஆண்கள் மற்றும் பெண்களை குறிவைத்து மோசடியில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளதும் தெரியவந்தது.

பின்னர் அந்த கும்பல் பேசிய செல்போன் எண்ணை வைத்து பார்த்தபோது டெல்லி பகுதியில் காண்பித்துள்ளது. இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் ஆப்ரேஷன்-டி என பெயர் வைத்துக்கொண்டு தனிப்படை அமைத்து டெல்லி உத்தம் மாவட்டத்திலுள்ள துவாரகா பகுதிக்கு விரைந்தனர். 

செல்போன் டவர் காண்பித்த குடியிருப்பில் சென்று விசாரித்த போது அந்த குடியிருப்பு முழுவதுமே நைஜீரியர்கள் தங்கி வந்ததால் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து செல்போன் எண்ணை வைத்து குடியிருப்பில் பதுங்கி இருந்த இரண்டு நைஜீரியர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பாலினஸ் மற்றும் கிளிடோ என தெரியவந்தது. இவர்கள் மேட்ரிமோனி வெப்சைட் ஒன்றை உருவாக்கி அதில் விவாகாரத்தாகி மறுமணம் செய்துகொள்ள விரும்பும் ஆண் மற்றும் பெண்ணின் செல்போன் எண்ணை எடுத்து மருத்துவர் போல் நடித்து பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

இதற்கு அவர்கள் "கிப்ட் ஸ்கேம்" என்ற பெயரை வைத்து மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. மேலும் இவர்களது கூட்டாளியான ஒரு பெண் உட்பட இருவர்   தப்பியோடிய நிலையில், இவர்களிடமிருந்து 15 செல்போன்கள், 4.3 லட்சம் ரூபாய் பணம், 15 ஏ.டி.எம் கார்டுகள், லேப்டாப் ஆகியவற்றை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட இரு நைஜீரியர்களை துவாரகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்டு பெற்று தனிப்படை போலீசார் சென்னை அழைத்துவந்து மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.