"யாரும் ஏஜெண்டுகளை நம்பி வெளிநாடு செல்ல வேண்டாம்"  பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்!

"யாரும் ஏஜெண்டுகளை நம்பி வெளிநாடு செல்ல வேண்டாம்"  பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்!

ஏஜெண்டுகளை நம்பி வெளிநாடு சென்று ஏமாந்த பெண் ஒருவர் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் மாரி ராஜி (42). கணவர் இல்லாத ஏழ்மை நிலையில் இருந்த இவர் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல முடிவு செய்தார். இந்த நிலையில் வெளிநாட்டிற்கு வீட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டுகள் சிலர் மாரி ராஜியிடம் கத்தார் நாட்டில் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை இருக்கிறது. நல்ல சம்பளம், உணவு தங்குமிடம் இலவசம், பாதுகாப்பான வேலை என்று ஆசை காட்டினர்.

இதையடுத்து மாரி ராஜி  கடந்த ஜூன் மாதம் 11ந்தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் கத்தார் நாட்டிற்கு சென்றார். கத்தார் நாட்டு தலைநகர் தோகா விமான நிலையத்தில் மாரி ராஜியை அங்கு உள்ள ஏஜெண்டுகள் வரவேற்று தங்களுடைய அலுவலகத்தில் தங்க வைத்தனர். கத்தார் நாட்டில் உள்ள மூன்று வீடுகளுக்கு அடுத்தடுத்து வேலைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு மிகுந்த கடுமையான வேலை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஓய்வே இல்லாமல் வேலை வாங்கியதாகவும்  சரியான உணவும் இல்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து மாரி ராஜி வேலையை விட்டுவிட்டு ஏஜெண்டுகளின் அலுவலகத்திற்கு சென்று அங்கே தங்கிக் கொண்டார்.  நான் இங்கு வேலை செய்ய விரும்பவில்லை. என்னை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி விடுங்கள் என்று ஏஜென்டுகளிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ஏஜெண்டுகள் வந்து ஒரு மாதத்திற்குள் வீடு திரும்புவதற்கு உங்களை அழைத்து வரவில்லை. ஒரு ஆண்டாவது இங்கு வேலை பார்க்க வேண்டும். இல்லையேல் ரூ. 5 லட்சம் பணம் கட்டினால் திருப்பி அனுப்புகிறோம் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து மாரி ராஜி தன்னிடம் பணம் எதுவும் இல்லை எனவும் இங்கு வேலை செய்ய மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

இதையடுத்து ஏஜெண்டுகள் மாரி ராஜியை ஒரு அறையில் அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் பட்டினி போட்டு கொடுமைப்படுத்தினர். மேலும் கேவலமான வார்த்தைகளால் திட்டி பயம் காட்டி சொல்கிற வீடுகளில் வேலை பார்த்து செய்யவில்லை என்றால் பணம், நகைகளை திருடியதாக புகார் கொடுத்து சிறையில் அடைத்து விடுவோம் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த மாரி ராஜி அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக மாடி பால்கனியில் இருந்து கீழே குதித்தார். அதில் காயம் அடைந்த மாரி ராஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மாரி ராஜி மருத்துவமனையில் இருந்த வேறு ஒருவரின் செல்போன் மூலம் தனது குடும்பத்தாரை தொடர்பு கொண்டு தான் இவ்வாறு கொடுமைப்படுத்தப்படுவதை கூறினார்.  மாரி ராஜியின் குடும்பத்தினர் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள தொண்டு அமைப்பிடம் புகார் செய்தனர். அந்த அமைப்புனர் மாரி ராஜியின் நிலைப்பற்றி, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை, மத்திய வெளியுறவுத்துறை,  கத்தார் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றிற்கும் தகவல் கொடுத்தனர்.  கத்தாரில் உள்ள ஐக்கிய தமிழர் அமைப்பு, இந்திய தூதரகம் உதவியுடன் மாரி ராஜியை மீட்டனர். அதன் பின்பு அவரை, மருத்துவ சிகிச்சைகளுடன் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்தனர். இந்திய தூதரக அதிகாரிகள், இவருக்கு விமான டிக்கெட் மற்றும் ஏற்பாடுகளை செய்து கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை வந்து சேர்ந்த மாரி ராஜியை, விமான நிலையத்தில் மாரி ராஜியை அவரின் குடும்பத்தினர், தொண்டு  நிறுவனத்தினர் வரவேற்று வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மாரி ராஜி  கூறியதாவது, எனது கணவர் இறந்து விட்டார். எனவே  குடும்பத்தை காப்பாற்ற வெளிநாடு போகும் முயற்சியில் ஈடுபட்டேன். அப்போது ஒரு பெண் ஏஜென்ட் என்னை கத்தார் நாட்டிற்கு அனுப்பி வைத்தார். அப்போது அவர் சுலபமான வீட்டு வேலை என்று கூறினார். ஆனால் கத்தார் நாட்டு ஏஜெண்டுகள், என்னை வேலைக்கு அனுப்பிய வீடுகளில் எல்லாம், மிகக் கடுமையாக வேலை வாங்கினார். இதனால் எனக்கு உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. எனவே என்னால் வேலை செய்ய முடியாது. இந்தியாவிற்கு திரும்புகிறேன் என்று கூறினேன். ஆனால் ஏஜெண்டுகள் என்னை மிரட்டி தனி அறையில் அடைத்து வைத்து கொடுமை செய்தனர். ரூ. 5 லட்சம் பணம் கேட்டு மிரட்டினர். செல்போனை பறித்து விட்டு உணவும் கொடுக்க மறுத்தனர். இதனால் இம்மாதம் 6ந் தேதி தற்கொலை செய்வதற்கு நான் ஏஜெண்டுகளின் அலுவலகம் மாடியில் இருந்து கீழே குதித்தேன். அதில் படுகாயம் அடைந்த நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். இந்தியாவில் உள்ள குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தேன். என்னை தூதரகம் உதவியுடன் மீட்டுக் கொண்டு வந்துள்ளனர். நான் மறுபிறவி எடுத்து வந்திருக்கிறேன். இனிமேல் வீட்டு வேலைக்கு என்று ஏஜெண்டுகள் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி பெண்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்வதை நிறுத்த வேண்டும். அத்தோடு இதைப்போல், பொய் வாக்குறுதி கொடுத்து பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்பி கொடுமைப்படுத்தும் ஏஜென்ட்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கூறினார்.

இதையும் படிக்க:"தயாரிப்பாளர்கள் கில்டு நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தினால் உடனடி நடவடிக்கை" நீதிமன்றம் உத்தரவு!