ஜிஎஸ்டி சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய அலுவலர் கைது..!

ஜிஎஸ்டி சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய அலுவலர் கைது..!

திருச்சியில் ஜிஎஸ்டி சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்றவர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். 

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் புத்தாநத்தத்தை சேர்ந்தவர் செபஸ்தியன் மகன் சேசு. இவர் மணப்பாறையில் சேசு நகை பட்டறை என்ற கடை வைத்து நகைத் தொழில் செய்து வருகிறார்.

இவரால் செய்யப்படும் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிக்க வேண்டி உள்ளது. அதற்காக தனது கடையின் பெயரில் ஜிஎஸ்டி சான்றிதழ் வேண்டி மணப்பாறையில் உள்ள வணிகவரி அலுவலகத்திற்கு கடந்த 25-6-2023 அன்று ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார்.

வணிகவரித் துறையில் இருந்து ஜிஎஸ்டி சான்றிதழ் வழங்குவதற்கு  அரசு கட்டணம் எதுவும் பெறப்படுவது கிடையாது.  சேசுவின் விண்ணப்பத்தின் பேரில்  நேற்று வணிகவரித்துறை அலுவலகத்தில் இருந்து வந்து சேசுவின் கடையை வந்து ஆய்வு செய்துவிட்டு அலுவலகத்திற்கு நேரில் வருமாறு கூறியுள்ளனர்.

அன்று மாலையே சேசு மணப்பாறையில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த வணிகவரி அலுவலர் கோவிந்தசாமி என்பவரை சந்தித்து தனது கடைக்கு ஜிஎஸ்டி சான்றிதழ் வழங்குமாறு கூறியுள்ளார். அப்போது, வணிகவரி அலுவலர் திரு. கோவிந்தசாமி சேசுவிடம் 2000 ரூபாய் கொடுத்தால் ஜிஎஸ்டி சான்றிதழ் உங்களது கடைக்கு வழங்குவோம் என்று கட்டாயமாக கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத சேசு திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையில் இன்று  காலை அளித்த புகாரின் பேரில்,  டிஎஸ்பி திரு மணிகண்டன் அவர்களின் தலைமையில் ஆய்வாளர்கள் திரு. சக்திவேல் திரு. பிரசன்ன வெங்கடேஷ் திரு. பாலமுருகன் மற்றும் திருமதி சேவியர் ராணி ஆகியோர் கொண்ட குழுவினர், இன்று 5-7-2023. மதியம் ஒரு மணி அளவில் சேசுவிடமிருந்து வணிகவரி அலுவலர் கோவிந்தசாமி 2000 லஞ்சமாக பெற்ற போது லஞ்ச ஒழிப்பு துறையினரால் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளார்

இதையும் படிக்க    |"வெளிப்படை தன்மையுடன் சிண்டிகேட் மற்றும் செனட் கூட்டங்கள் நடைபெறுவதில்லை"- ஆளுநா் ஆர்.என்.ரவி!