பேருந்துக்காக காத்திருந்த முருகன்...பொய் வழக்கில் கைது செய்த போலீசார்...மாநில மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு என்ன?
பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு போலீசாரால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட நபருக்கு ஆறு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பொய் வழக்கு:
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முருகன் என்பவர் கடந்த 2009ஆம் ஆண்டு திருப்பூர் செல்வதற்காக பெருமாநல்லூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது பெருமாநல்லூர் காவல் நிலையத்தின் அப்போதைய ஆய்வாளர் சோமநாதன் மற்றும் உதவி ஆய்வாளர் கென்னடி ஆகியோர் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி காவல் நிலையம் அழைத்து சென்று துன்புறுத்தியதாக, முருகன், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.
துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு:
அதில், திருடப்பட்ட நகைகள் எங்கே என கேட்டு, காவல் நிலையத்தில் வைத்து தன்னை தாக்கியதாகவும், ஈரோட்டில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்று விசாரணை என்ற பெயரில் தனது மனைவி மற்றும் சகோதரியை தகாத வார்த்தைகளில் பேசியதோடு, வீட்டையும் சூறையாடியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க: தீபாவளி பண்டிகை: பன்மடங்காக உயர்ந்த விமான கட்டணம்...அதிர்ச்சியில் பயணிகள்!
6 லட்சம் இழப்பீடு:
இந்த புகாரை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், தவறான குற்றச்சாட்டில் முருகனை கைது செய்து துன்புறுத்தியது ஆதாரங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளதாக கூறி, அவருக்கு ஆறு லட்சம் ரூபாயை இழப்பீடாக எட்டு வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசுக்கு உத்தரவு:
இந்த தொகையை பெருமாநல்லூர் காவல் நிலையத்தின் அப்போதைய காவல் ஆய்வாளர் சோமநாதன் மற்றும் உதவி ஆய்வாளர் கென்னடியிடம் இருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வீதம் வசூலிக்கவும் மனித உரிமைகள் ஆணையம், அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.