சைடிஷ்-காக வைத்திருந்த ஆம்லேட்டை உண்ட மைத்துனர்... ஆத்திரமடைந்த நபர் வெறிச்செயல்!!

சைடிஷ்-காக வைத்திருந்த ஆம்லேட்டை உண்ட மைத்துனர்... ஆத்திரமடைந்த நபர் வெறிச்செயல்!!

செங்கல்பட்டு அருகே மது அருந்துவதற்காக வைத்திருந்த ஆம்லேட்டுகளை, மைத்துனர் எடுத்து சாப்பிட்டுவிட்டதால், ஆத்திரத்தால் அவரை கட்டையால் அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினம் உய்யாலிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் (30). இவரும் அவரது மைத்துனரான முருகனும் இணைந்து நாள்தோறும் மது அருந்துவது வழக்கம். 

இந்த நிலையில் செல்லப்பனும் முருகனும் 3-ம் தேதியன்று புதுப்பட்டினம் ஈ.சி.ஆர். சாலையின் அருகே ஒரு இடத்தில் வைத்து ஒன்றாக மது அருந்திக் கொண்டிருந்தனர். மது அருந்துவதற்காக சைட் டிஷாக 2 ஆம்லேட் வாங்கி வைத்திருந்தார் செல்லப்பன். ஆனால் முருகன், அந்த 2 ஆம்லேட்டுகளையும் எடுத்து சாப்பிட்டு விட்டதால் ஆத்திரமடைந்துள்ளார் செல்லப்பன். 

தனக்கு வைத்திருந்த ஆம்லேட்டை எதற்காக எடுத்தாய் என சீறிய செல்லப்பன், முருகனிடம் கட்டிப் புரண்டு சண்டையிட்டுள்ளார். இதனால் கடும் கோபமடைந்த முருகன், செல்லப்பனை கட்டையால் சரமாரியாக அடித்துள்ளார்.  

பலத்த காயமடைந்து அங்கேயே சுருண்டு விழுந்த செல்லப்பனை அந்த பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்சில் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே செல்லப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கல்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, கொலையாளி முருகனை தேடிப் பிடித்து கைது செய்துள்ளனர்.

இதையும் படிக்க || சோழர்களின் பெருமையை உணர்த்தும் உலகத் தர அருங்காட்சியகம்... 2 இடங்கள் தேர்வு!!