போலீசாரையே அலறவிட்ட பிக் பாக்கெட் திருடன்!!அந்நியன் ஸ்டைலில் மகா நடிகன்...

திருப்பூரில் வட மாநில தொழிலாளர்களிடம் கைவரிசை காட்டும் பிக்பாக்கெட் திருடனின் சேட்டையால் போலீசார் விழிபிதுங்கி செய்வதறியாது திகைத்து நின்றனர்.

போலீசாரையே அலறவிட்ட  பிக் பாக்கெட் திருடன்!!அந்நியன் ஸ்டைலில்  மகா நடிகன்...

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக பணியாற்றி வருபவர் தான் கவின் ஜாய். அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த இவர் பெங்களூரில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது மது அருந்த நினைத்த  கவின் ஜாய் கையில் அதிக பணத்தோடு அருகில் இருந்த டாஸ்மாக் கடைக்கு சென்று  மது அருந்தி வருவதை கண்ட இளைஞர் ஒருவர் அவரை பின் தொடர்ந்து வந்துள்ளார்.

இதனைதொடர்ந்து, கவின் ஜாய் பேருந்தில் ஏற முயன்ற போது அவரை பின் தொடர்ந்த அந்த இளைஞர் தனது பொருட்களை காணவில்லை எனக் கூறி கவினை சோதனை செய்வது போல செல்போன் மற்றும் பாக்கெட்டில் வைத்திருந்த 12 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி உள்ளான். அது என்னுடைய பணம் என கவின் கூறியதால் அந்த இளைஞர்  கவினை தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த கவினின் கூச்சல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் இருவரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

போலீசாரை கண்டதும் அந்த திருடன் அந்நியன் போல நடிக்க துவங்கினான். தன்னை எல்லோரும் தாக்கி விட்டனர் எனது மண்டை உடைந்து விட்டது என கீழே விழுந்து மயங்கியவன் போல படுத்து பின்னர் உடனடியாக எழுந்து கவினை பார்த்து நீ தானே என்னை அடித்தாய் வா போலீசிடம் போகலாம் என வீர வசனம் பேசினான். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த  திருடனின் சேட்டையால் போலீசார் விழிபிதுங்கி செய்வதறியாது திகைத்து நின்றனர். 

பின்னர்  விசாரணை செய்த போலீசார் கவினின் செல்போன் மற்றும் பணத்தை திருடியது அந்த இளைஞன் தான் என்பது தெரியவந்தது. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞன் கோவை சின்னியம்பாளையத்தை சேர்ந்த ராகுல்  என்பதும் தெரியவந்தது.  மேலும்  இச்சம்பவம் தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.