போலீசுக்கே மயக்க ஊசி போட்டு கடத்தி பணம் பறித்த நபர் கைது...

மயக்க ஊசி போட்டு கடத்தி 1லட்சம் பணம் மற்றும் செல்போனை உளவுத்துறை தலைமைக் காவலரிடம் இருந்து பறித்த வழக்கில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

போலீசுக்கே மயக்க ஊசி போட்டு கடத்தி பணம் பறித்த நபர் கைது...

சென்னை சூளைமேடு பஜனைக் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி(45). மாநில உளவுத்துறையில் தலைமைக் காவலராக டி.ஜி.பி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 28 ஆம் தேதி ரவி பணிக்காக செல்லும் போது அவருக்குத் தெரிந்த நபரான அஜய் விக்கி காரில் வந்து டி.ஜி.பி அலுவலகம் வழியாக தான் செல்வதாகவும், வாருங்கள் விட்டு விடுகிறேன் எனக் கூறி காரில் அழைத்து சென்றார். காரினுள் அஜய் விக்கியின் நண்பர்கள் இருவர் இருந்தனர்.

பின்னர் ஓ. எம்.ஆர் சாலையில் புதிதாக ஆரம்பித்துள்ள கடையை காண்பிப்பதாகக் கூறி அஜய் விக்கி காரிலேயே ரவியை அழைத்து சென்றார். கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றபோது பின்புறம் அமர்ந்திருந்த இருவர் திடீரென கையில் ஊசி ஒன்றை செலுத்தியதாகவும், பின்பு ரவி மயக்க நிலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து ரவியின் பையிலிருந்த செல்போனை எடுத்து கூகுள் பே வழியாக 1 லட்சம் ரூபாய் பணத்தை அவர்கள் எண்ணுக்கு டிரான்ஸ்பர் செய்தனர். இதனையடுத்து மயக்கம் தெளிந்தவுடன் ஓ. எம்.ஆர் சாலையின் பிளாட்பாரத்தில் ரவி படுத்து கிடந்துள்ளார். உடனடியாக ரவி இது தொடர்பாக சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சூளைமேடு போலீசார் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து கடத்தல், உள் நோக்கத்தோடு கடத்தல், சிறைவைத்தல், வழிப்பறி, ஆபத்தான மருந்தை கொடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து தலைமறைவாக உள்ள  அஜய் விக்கி மற்றும் அவரது கூட்டாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் கடத்திய பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஒசூர் போலீசார் வாகன சோதனையின் போது பிடித்த விக்னேஷ்வரன் என்பவரை சென்னை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சென்னை தனிப்படை போலீசாரிடம் விக்னேஷ்வரனை ஒப்படைத்தனர். இந்நிலையில் விக்னேஷ்வரனை சென்னைக்கு அழைத்து வரும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தலைமைக் காவலரை கடத்திய விவகாரத்தில் விக்னேஷ்வரனுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தலைமறைவாக உள்ள மற்றவர்களைப் பிடிக்க தனிப்படை போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.