அழுகிய நிலையில் பள்ளி மாணவியின் சடலம் மீட்பு...கொலையா? என போலீசார் விசாரணை!

கோவை சரவணம்பட்டி அருகே முட்புதரில் அழுகிய நிலையில் பள்ளி மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அழுகிய நிலையில் பள்ளி மாணவியின் சடலம் மீட்பு...கொலையா? என போலீசார் விசாரணை!

கோவை சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரம் யமுனா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி கலைவாணி, இவர்களுக்கு 15 வயதில் மகள் உள்ளார். இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை தனது மகளை காணவில்லை என அவரது தாய் கலைவாணி சரவணம்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.]

புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாணவியை தேடிவந்தனர். இந்தநிலையில் இன்று காலை மாணவியின் வீட்டிற்கு அருகே இருக்கக்கூடிய முட்புதரில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது.

தகவலின்பேரில் விரைந்து சென்ற போலீசார், அந்த இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது மூட்டையில் கட்டப்பட்டநிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் இருந்தது தெரியவந்தது. மூட்டையில் இருந்த இளம்பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்தனர்.

விசாரணையில் கடந்த சனிக்கிழமை அன்று காணாமல்போனதாக கூறப்பட்ட 10 ஆம் வகுப்பு மாணவியின் சடலம் என்பது தெரியவந்தது. அதனைதொடர்ந்து சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், மாணவியை கொலை செய்தது யார் ? எதற்காக கொலை செய்தனர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா ? என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.