அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளை.. வருத்தத்தில் சென்ற திருடர்களுக்கு போலீசார் வலைவீச்சு!!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நந்தவனமேட்டூர் பகுதியில் அப்பாஸ் ஜாகிர் என்பவர் செல்போன் கடை வைத்துள்ளார். இவர் தனது கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்ற நிலையில்,மர்மநபர்கள் கல்லாவில் இருந்த ரூ.25 ஆயிரம், ஏ.டி.எம்.கார்டு உள்ளிட்டவை இருந்த பை மற்றும் விலை உயர்ந்த செல்போன்களை திருடிச் சென்றுவிட்டனர் .
மேலும் அதே நபர்கள், அருகில் உள்ள தேவராஜ் (42) என்பவரது மளிகை கடை பூட்டை உடைத்து சிகரெட் பாக்கெட், குளிர்பானங்கள் உள்ளிட்ட மளிகைப் பொருட்களை திருடினர். பின்னர் தரணிகுமார் (50) என்பவரது வாட்ச் கடை பூட்டை உடைத்து ரூ. 17 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த வாட்ச் ஆகியவற்றையும் அள்ளிச் சென்றனர்.
மேலும் கொள்ளையர்கள் அருகில் உள்ள நகை கடை பூட்டையும் , அங்குள்ள வினை தீர்க்கும் விநாயகர் கோவில் பூட்டையும் உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் பூட்டை உடைக்க முடியாததால் தப்பிச் சென்றுவிட்டனர்.
இது குறித்து வியாபாரிகள் ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். தொடர் திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் கடை வைத்து நடத்தும் வியாபாரிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.