காஞ்சிபுரத்தில் தொடரும் குற்றச் சம்பவங்கள்... பிரபல ரவுடி மீது வெறிச்செயல்!!

காஞ்சிபுரத்தில் தொடரும் குற்றச் சம்பவங்கள்... பிரபல ரவுடி மீது வெறிச்செயல்!!

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆட்டோவில் சென்ற பிரபல ரவுடியை வழிமறித்து, நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்துவிட்டு குற்றவாளிகள் தப்பியோடியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியைச் சேர்ந்தவர் எபினேசர் (25). இவர் மீது வெள்ளவேடு, பூந்தமல்லி, நசரத்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் குற்றச்சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். 

இந்த நிலையில் அரக்கோணம் தண்டலம் நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை மேப்பூர் மணிகண்டனின் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல், ஆட்டோ மீது நாட்டு வெடிகுண்டு வீசி உள்ளனர். அப்போது ஆட்டோவில் இருந்து இறங்கி தப்பி ஓடிய எபினேசர் மீது மறுபடியும் நாட்டு வெடிகுண்டு வீசியதில் தலை சிதறி போனது.

அதனையடுத்து மர்ம கும்பல் கத்தி வீச்சருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மூலம் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் எபினேசரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டனை தேடி வருகின்றனர். மணிகண்டன் கிடைக்கும் பட்சத்தில் யார் யார் எபினேசரை கொலை செய்தனர் என தெரியவரும் என போலீசார் கூறி வருகின்றனர். ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூரில் தொடர் கொலையால் பதற்றம் நிலை தொடர்ந்து வரும் சூழலில் மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு ரவுடி நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதையும் படிக்க || "சனாதனத்துக்கு முன்பு திமுகவை தான் ஒழிக்க வேண்டும்" டி.டி.தினகரன் பேச்சு!!