முகநூல் மூலம் வெளிநாட்டு பெண்ணூடன் பழக்கம்...திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி....வாலிபரை கைது செய்த போலீஸ்...!!

முகநூல் மூலம் வெளிநாட்டுப்பெண்ணுடன் பழகி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சுமார் 10 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முகநூல் மூலம் வெளிநாட்டு பெண்ணூடன் பழக்கம்...திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி....வாலிபரை கைது செய்த போலீஸ்...!!

சைப்ரஸ் நாட்டில் வசித்து வரும் பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் ஒன்றை அனுப்பினார். அந்தப் புகாரில் சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் அருண் பிரகாஷ் என்பவர் தன்னிடம் முகநூல் மூலம் நண்பராக அறிமுகமாகி பின்னர் வாட்ஸ் ஆப் எண்ணைப் பெற்றுக்கொண்டு தன்னை தொடர்புகொண்டு தொடர்ந்து பழகி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த நபர் தன்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி தன்னிடமிருந்து சுமார் 10 லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டதாகவும், அதன் பின்பு தன்னுடன் தொடர்பை துண்டித்துக் கொண்டதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.

அதன்பின்னர் அருண் பிரகாஷ்  வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட விவரம் சமீபத்தில் தனக்கு தெரியவந்ததால் தன்னை ஆசைவார்த்தைகள் கூறி ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட, அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டுத்தரும்படி புகாரில் தெரிவித்திருந்தார்.

இப்புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சென்னை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த அருண் பிரகாஷ் சைப்ரஸ் நாட்டில் வசித்து வரும் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி 10 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று ஏமாற்றியது ஆதாரங்கள் மூலம் உறுதியானது.

அதனடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நேற்று அருண் பிரகாஷை அவரது வீட்டில் வைத்து கைது செய்து அவரிடமிருந்து பணம் மோசடிக்குப் பயன்படுத்திய வங்கி கணக்கு, ஏ.டி.எம் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அதன்பின்னர் அருண் பிரகாஷ் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.