Carding Process-ல் 1,00,000ரூ ஐபோன் 4000ரூ... நூதன மோசடி பற்றிய விரிவான தகவல்!!
விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களை, அடிமட்ட விலைக்கு வாங்கி தருவதாக சில இணைய குற்றவாளிகள், சமூக வலைத்தளங்கள் மூலம் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுவாகவே மக்களுக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கி உபயோகிப்பதில் அதிகளவில் ஆர்வமும், ஆசையும் இருக்கும். மக்களின் இந்த ஆசையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சைபர் குற்றவாளிகள், 1,00,000 மதிப்புள்ள ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற ஸ்மார்ட் போன்களை வெறும் 4000 அல்லது 8000 ரூபாய்க்கு வாங்கி தருவதாக, பேராசை காட்டி, மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதுபோன்ற இணைய குற்றங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன.
இந்த இணைய குற்றத்துக்கு Carding Process என பெயர். இந்த குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர், சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டெலிகிராம் மற்றும் வாட்சாப் போன்றவற்றை மூலதனமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த குற்றச்செயலின் முதல் அடி, குறைந்த பணத்தில் புதிய ஐபோன் கிடைக்கும் என மக்களை நம்ப வைப்பது தான். இதற்காக நெட்டிசன்களால் பெரியளவில் உபயோகப்படுத்தப்படும் சமூக செயலிகளில் விளம்பரம் செய்யப்படும். இந்த விளம்பரங்களை நம்பி வரும் நபர்களுக்கு, Carding Process பற்றி விரிவாக கூறுவார்கள் குற்றவாளிகள். ஆனால், அதிலும் சில உண்மைகள் மறைந்திருக்கும்.
அதாவது, சில தடை செய்யப்பட்ட இணையதளங்களில் இருந்து, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் மக்களின் கிரெடிட் கார்டுகளின் தகவல்களை பதிவிறக்கம் செய்து, அதனை பயன்படுத்தி, தன்னிடம் குறைந்த விலையில் பொருட்களை கேட்ட நபருக்கு, அவர் கொடுத்த முகவரிக்கே, அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற நம்பகத்தன்மையான தளங்கள் மூலம் விநியோகம் செய்யப்படும்.
அதன் பின்னர், பொருட்களை பெற்ற நபர்களிடம் இருந்து பார்சலை பிரிக்கும் வீடியோ மற்றும் போட்டோக்களை பெற்று, அடுத்து தன்னிடம் சிக்கும் நபர்களிடம் காண்பித்து சந்தேகத்தை தீர்த்து மீண்டும் அதே குற்றங்களை செய்வார்கள்.
குறைந்த பண செலவில், விலையுயர்ந்த பொருட்கள் கிடைத்தாலும், கண்ணுக்கு தெரியாத ஆபத்து ஒன்றும் உள்ளது. அதாவது, வெளிநாட்டு மக்களின் பணத்தை திருடி அதன் மூலம் பொருட்களை நமது கைக்கு கிடைக்க செய்தாலும், இவ்வித செயல்களை சைபர் க்ரைம் அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருப்பதை, பொருட்கள் கிடைக்கும் சந்தோஷத்தில் மறந்து விடுகின்றனர்.
இணையத்தில் உலா வரும் மக்கள், இது போன்ற விளம்பரங்களை தவிர்ப்பது மட்டுமல்லாமல், இணைய குற்றப்பிரிவு அதிகாரிகளிடம், ஆதாரத்துடன் புகாரளிப்பதே சிறந்தது.
இதையும் படிக்க || உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு கூடுதலாக மானியம் அறிவிப்பு!