சுங்கத்துறை பெண் துணை ஆணையருக்கு கத்திக்குத்து... குடிபோதையில் தாக்கிய கணவரிடம் விசாரணை...

உறவினர் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என வற்புறுத்திய சென்னை சுங்கத்துறையில் பணியாற்றும் பெண் துணை ஆணையரை குடிபோதையில் கத்தியால் தாக்கிய கணவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுங்கத்துறை பெண் துணை ஆணையருக்கு கத்திக்குத்து... குடிபோதையில் தாக்கிய கணவரிடம் விசாரணை...

சென்னை கோயம்பேடு கேம்ஸ் வில்லேஜ் குடியிருப்பில் வசித்து வருபவர் சர்மிளா(32). இவரது தந்தை கிருஷ்ணன் சென்னை காவல் துறையில் உதவி ஆணையராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். சர்மிளா சென்னை விமான நிலையத்தில் உள்ள சரக்கு ஏற்றுமதிப் பிரிவில் (cargo) சுங்கத்துறை துணை ஆணையராக பணியாற்றி வருகிறார். இவருக்கு செல்வமுத்து குமரன் என்பவருடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 5 வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவரது கணவர் செல்வமுத்து குமரன் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்றிரவு 1.15 மணியளவில் கணவன், மனைவி இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது சர்மிளா மதுரையில் நடைபெறவுள்ள தனது உறவினர் திருமணத்திற்குச் செல்ல வேண்டும் எனக் கணவரிடம் கேட்டதற்கு அவர் செல்லக்கூடாது என கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மதுபோதையில் இருந்த சர்மிளா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தன்னைதானே குத்திக்கொள்ள போவதாகக் கூறி கணவர் செல்வமுத்துவை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதைக்கண்ட மதுபோதையில் இருந்த கணவர் செல்வமுத்து  ஆத்திரத்தில் சர்மிளா கையில் இருந்த கத்தியைப் பிடுங்கி அவரது இடதுபுற மார்பு மற்றும் கைப் பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சர்மிளாவின் கூச்சல் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோயன்பேடு சி.எம்.பி.டி போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கணவர் செல்வமுத்துக் குமரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.